தமிழகத்தில் கனமழை, இலங்கைக்கும் புயல் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவான நிலையில், நாளை அது புயலாக மாற வாய்ப்புள்ளது என்று தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மையம்,புயல் இலங்கையைக் கடக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.

மேலும் இதனால்  வரும் 2ம் திகதி சென்னையில் மிதமான மழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், “நேற்று தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதி மற்றும் இந்தியப் பெருங்கடலை ஒட்டிய பூமத்திய ரேகைப் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் ஏறக்குறைய 975 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இது இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் வரும் 2-ம் திகதி மாலை இலங்கையைக் கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரும்.

இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அத்தோடு புயல் இலங்கையைக் கடக்க வாய்ப்புள்ளது. இலங்கையைக் கடந்தபின் குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் என்பது தற்போதைய நிலை என்று தெரிவித்துள்ளார்.