Tamil News
Home ஆய்வுகள் தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர் – வைத்தியர் கணேசன் சபாரட்ணம்

தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர் – வைத்தியர் கணேசன் சபாரட்ணம்

மே மாதம் 25 ஆம் திகதி தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் பிறந்த தினம். இத்தினத்தையொட்டி இச் சிறப்புக் கட்டுரை  வெளிவருகின்றது.

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் மானிப்பாய்க் கோவிற்பற்றைச் சேர்ந்த நவாலியூர் என்னும் சிற்றூரில் வன்னியசேகர முதலியார் வழித்தோன்றலாய் அருமையினார் கதிர்காமர் இலக்குமிப்பிள்ளை ஆகியோருக்கு மே 25, 1878இல் பிறந்தவர் சோமசுந்தரர். இவருடன் உடன்பிறந்தவர். க. வேலுப்பிள்ளை. தனது 28ஆவது வயதில் சங்குவேலியைச் சேர்ந்த புலவரின் தாய்மாமனார் வேலுப்பிள்ளை என்பவரின் புதல்வி சின்னம்மையைத் திருமணம் புரிந்தார். அவர்களுக்கு இளமுருகனார், நடராசன், வேலாயுதபிள்ளை, மங்கையற்கரசி, சரசுவதி என ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள்.

தந்தையிடமும் நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடமும் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் கற்றார். உறவினர் இராமலிங்க உபாத்தியாயரிடமும் மானிப்பாய் மாரிமுத்துவிடமும் ஆங்கிலம் கற்றார்.

சிறு வயதிலேயே பேச்சாற்றலும், விவாதத் திறமையும் ஒருங்கே பெற்றிருந்தார். ஏராளமான பாடல்கள் இயற்றினார். அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருஊஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை உள்ளிட்ட நூல்கள் இவர் இளம் வயதில் இயற்றியவை.

ஆசிரியப் பணியிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். வட்டுக்கோட்டையில் இருந்த சின்னத்தம்பி ஆசிரியருடன் இணைந்து ஆங்கிலப் பாடசாலை தொடங்கினார். அங்கு 40 ஆண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், இதிகாசம் கற்பித்தார். ‘சைவ வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி சமயப் பாடங்களைக் கற்பித்தார்.

ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழி காட்டியாகத் திகழ்ந்தார். ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட மாணவர்களுக்கு சைவ சித்தாந்தம் உள்ளிட்ட இலக்கிய வகுப்புகளை நடத்தி தமிழ்த் தொண்டு ஆற்றினார். கலித்தொகை, திருக்குறள், திருக்கோவையார், சிவஞான போதம் கந்தபுராண செய்யுள்களைத் தெளிவாகவும், அழகாகவும், நகைச்சுவையுடனும் நடத்தி மாணவர்களுக்கு விளங்க வைப்பார்.

பதிகம், ஊஞ்சல், கலம்பகம், நான்மணி மாலை அட்டகம், அந்தாதி சிலேடை வெண்பா என பல வடிவில் பாடல்கள் பாடியுள்ளார். இவற்றுள் 400இற்கும் மேற்பட்ட அடிகள் கொண்ட கலிவெண்பா பாவகையில் அமைந்த தாலவிலாசம் மிகவும் பிரசித்தமானது.

யாப்பிலக்கணங்கள் கற்பதற்கு முன்பாகவே பல தனிப் பாடல்களைப் பாடியுள்ளார். இதனால் இவரை ‘வரகவி’ என்று அழைத்தனர். ‘உயிரிளங்குமரன்’ என்ற நாடகமும் எழுதியுள்ளார். இது அட்டகிரி கந்தசுவாமி கோயிலில் அரங்கேற்றப்பட்டது.

 ‘சைவபாலிய சம்போதினி’ என்ற சைவ சித்தாந்த மாத இதழை 1910இல் தொடங்கி 5 ஆண்டுகள் நடத்தினார். 1927இல் ஈழத்து தென்னிந்தியத் தமிழ் அறிஞர்கள் இவருக்குப் பொற்கிளியும் புலவர் பட்டமும் வழங்கினர்.

ஆங்கில ஆட்சியை எதிர்த்து தேசிய விழிப்புணர்வைத் தூண்டும் பாடல்களை எழுதினார். கந்தவனக் கடவை, நான்மணிமாலை தந்தையார் பதிற்றுப்பத்து, நல்லையந்தாதி நல்லை முருகன் திருப்புகழ் கதிரைமலை வேலவர் பதிகம் ஆகியவை குறிப்பிடத் தக்க படைப்புகள்.

குழந்தைகளுக்கான ஆடிப்பிறப்பு, கத்தரி வெருளி, புளுக்கொடியல், பவளக்கொடி, இலவுகாத்த கிளி உள்ளிட்ட ஏராளமான பாடல்களை இயற்றி சிறுவர் இலக்கிய முன்னோடி என்ற பெருமை பெற்றார். தாடி அறுந்த வேடன், எலியும் சேவலும் உள்ளிட்ட இவரது கதைப் பாடல்கள் சிறுவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை.

தமிழையும், சைவத்தையும் இரு கண்களாகப் போற்றினார். ஏறக்குறைய 15 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக இவர் பாடிய பாடல்கள் ‘சிறுவர் செந்தமிழ்’ என்ற பெயரில் 1955இல் நூலாக வெளிவந்தது. சிலேடை வெண்பா இயற்றுவது இவரது தனிச்சிறப்பு. தமிழுக்காக 60 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டாற்றிய ‘தங்கத் தாத்தா’ நவாலியூர் சோமசுந்தர புலவர் 75ஆவது வயதில் யூலை 10 1953இல் மறைந்தார்.

 

Exit mobile version