Tamil News
Home செய்திகள் ஞானசார தேரர் வெறும் முகமூடி மாத்திரமே அதன்பின்னால் இனவெறிச் சக்திகள் ஒளிந்துள்ளன – ரெலோ

ஞானசார தேரர் வெறும் முகமூடி மாத்திரமே அதன்பின்னால் இனவெறிச் சக்திகள் ஒளிந்துள்ளன – ரெலோ

இலங்கை சிங்கள பௌத்த நாடு. இதனை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும் இந்தநாட்டில் இருக்கலாம். இல்லையெனில் தங்களின் உடமைகளுடன் வேறு நாடுகளுக்குசெல்லலாம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.

ஞானசார தேரரின் இந்தக் கருத்து தொடர்பாக ரெலோ அமைப்பினர் நேற்று
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.குடியகல்வு அதிகாரங்கள் தேரருக்கு எப்போது கிடைத்தது என கேள்வியெழுப்பியுள்ள ரெலோ அமப்பு, இவ்வாறான இனவாதக் கூச்சல்களால
தமிழர்களை அச்சுறுத்திவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஞானசார தேரர் வெறும் முகமூடி மாத்திரமே எனவும், அந்த முகமூடியின் பின்னால் வலிமை கொண்ட இனவெறிச் சக்திகள் ஒளிந்து நின்றுசெயற்பட்டு வருகின்றன என்பதையும் நாமறிவோம் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் ஞானசார தேரர் இவ்விதம் பேரினவாத கூச்சல்களை எழுப்பிக்கொண்டிருப்பதையிட்டு அவருக்கு கருணை அடிப்படையில் பொது மன்னிப்புக் கொடுத்தவரும் பாதுகாப்பு அமைச்சை நிர்வகிப்பவருமான ஜனாதிபதி என்னசொல்லப் போகிறார்? எனவும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேரரின் இனவாதக் கூச்சலையிட்டு தமிழர்கள் ஒருபோதும் மிரளமாட்டார்கள். அவர்களின் பயமுறுத்தல்கள் தமிழர்களை எதுவும் செய்துவிடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஞானசார தேரரின் இது போன்ற பச்சையான பேரினவாதக் கருத்துக்கள் ஆச்சரியத்திற்கு உரியன அல்ல எனவும் அவரிடமிருந்து இதனை தவிர வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது என்றும் ரெலோ அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் எமது கேள்வியெல்லாம் குடியகல்வு அதிகாரங்கள் அவருக்கு எப்போதுஎந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது என்பதுதான்.தற்போது ஜனாதிபதி தேர்தலை நாடு எதிர்நோக்கியுள்ள நிலையில், தமிழ் மக்கள்
மற்றும் முஸ்லிம் மக்கள் ஓர் நிலைப்பாட்டிற்கு வருவதற்கு இவர்களின் பதில்கள் கட்டாயமானவையாகும்.

அதே நேரத்தில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தங்களின் சட்டபூர்வமான உரிமைகள் என்ன என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version