ஜூன் 21 வரை பயணத் தடையை நீடிக்க தவறான தகவலே காரணம்- கோட்டாபய

“நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை, ஜூன் மாதம் 14ஆம் திகதியன்று தளர்த்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், ஜூன் மாதம் 11ஆம் திகதியன்று, 101 மரணங்கள் பதிவானதாகக் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், ஜூன் 21 வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.”

இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

கொரோனா ஒழிப்புக்கான விசேட குழு, நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடியபோதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“குறித்த மரணங்கள் ஏற்பட்டுள்ள விதம் பற்றி சுகாதார மற்றும் புலனாய்வுத்துறையின் ஊடாக மீண்டும் விரிவாக ஆராயப்பட்டது.

பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளின்படி சில மரணங்கள் பெப்ரவரி 6 முதல் ஜூன் 11ஆம் திகதி வரையான 4 மாதக் காலப்பகுதியில் பதிவாகி, மரணச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. சில மரணங்கள் பற்றிய தகவல்கள், இரண்டு முறை பதிவிடப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

ஜூன் 11ஆம் திகதி இடம்பெற்ற மரணங்களின் எண்ணிக்கை, 15 மட்டுமே ஆகும். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் போது, 101 மரணங்கள் அன்றைய தினம் பதிவாகவில்லை என்பது தெரியவந்தது.

அதனால், தரவுகளை வெளியிடும்போது சரியானதாகவும் இற்றைப்படுத்தப்பட்டதாகவும் இருப்பது, தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமாகும்” – என்றார்.

இதன்போது, கொரோனா அல்லாத மரணங்களை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்துவதால், இறுதிக்கிரியைகளை நடத்துவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் மூலம், உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் முகங்கொடுக்கும் பொருளாதார மற்றும் ஏனைய கஷ்டங்களைக் கருத்தில்கொண்டு, கொரோனா காரணமாகவன்றி வேறு காரணங்களில் மரணிக்கின்றவர்களின் இறுதிக்கிரியைகளை 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.