Home ஆய்வுகள் ஜீ -7 நாடுகளின் மாநாட்டைச் சுற்றி நடக்கும் நகர்வுகள் – வேல் தர்மா

ஜீ -7 நாடுகளின் மாநாட்டைச் சுற்றி நடக்கும் நகர்வுகள் – வேல் தர்மா

2021 ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கோண்வோல் நகரில் ஜீ-7 எனப்படும் அமெரிக்கா, இத்தாலி, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் உச்சிமாநாடு நடக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பிலும் ஒரு பிரதிநிதி பங்கு கொள்கின்றார். கோவிட்-19 பெருந் தொற்று, அதற்கான தடுப்பூசி, சூழல் பாதுகாப்பு, திறந்த பொருளாதாரம், தொழில்நுட்ப மாற்றம், விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் ஆகியவை உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடம் வகிக்கின்றன. சென்ற ஆண்டு பெருந்தொற்று நோய் பரவலைத் தவிர்க்க மெய்நிகர் வெளியில் நடந்த மாநாடு, இந்த ஆண்டு ஜீ-7 நாடுகளின் ஆட்சியாளர்களின் நேரடிப் பங்கேற்றலுடன் நடக்கின்றது. தற்போது உள்ள ஏழு நாடுகளின் மொத்தப் பொருளாதார உற்பத்தி உலகப் பொருளாதார உற்பத்தியின் 40% ஆகும். ஆனால் அவற்றின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையின் 10% மட்டுமே. இதனால் இவை உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஜீ-7 வரலாறு இரசியா உள்ளே வெளியே

1973 ஜீ-4 அமெரிக்கா, பிரான்ஸ், மேற்கு ஜேர்மன், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்டது. பின்னர் 1975இல் இத்தாலி, ஜப்பான், கனடா, ஆகிய நாடுகள் இணைந்தபோது அது ஜீ-7 எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1991 ஜூன் மாதம் சோவியத் ஒன்றியத்திற்கு இணை உறுப்புரிமை வழங்கப்பட்டது. 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியாவிற்கு பெருமளவு நிதி உதவி ஜீ-7 நாடுகளால் வழங்கப்பட்டது. 1997 ஜூன் மாதம் இரசியாவிற்கு முழு உறுப்புரிமை வழங்கியதில் இருந்து ஜீ-8 நாடுகள் என அழைக்கப்பட்து. இரசியா 2014ஆம் ஆண்டு உக்ரேனின் கிறிமியாவைத் தன்னுடன் இணைத்த பின்னர் இரசியா வெளியேற்றப்பட்டு மீண்டும் ஜீ-7 நாடுகள் என்னும் பெயர் பெற்றது.

பெருந் தொற்று பொருளாதார மீட்சி

WhatsApp Image 2021 06 12 at 6.56.55 PM ஜீ -7 நாடுகளின் மாநாட்டைச் சுற்றி நடக்கும் நகர்வுகள் - வேல் தர்மா

பெருந்தொற்றால் பாதிப்படைந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு உலகெங்கிலும் உள்ள அரசுகள் வித்தியாசமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. பெருந்தொற்றால் பெருமளவு மக்கள் வேலை இழந்து வாழ முடியாமல் துயரப்படும் போது அவர்களின் கைகளில் நேரடியாக பணத்தைக் கொடுத்தன. அரச நிதி நெருக்கடியை கவனத்தில் எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மக்களின் கைகளில் பணத்தையும், பொருட்களையும் இலவசமாகவும் இலகு கடனிலும் அரசுகள் திணித்தன. அதனால் நாட்டில் கொள்வனவு அதிகரித்து, பொருளாதாரம் மீள வளர்ச்சியடையும் என அரசுகள் எதிர்பார்த்தன. ஆனால் உற்பத்தித் துறையில் பெரும்பகுதி மூடி இருந்ததால், மக்கள் வாங்க முன்வந்த பொருட்கள் சந்தையில் இல்லை. அதனால் விலைகள் அதிகரித்தன. உலகெங்கும் பணவீக்கம் தலைதூக்கியுள்ளது. பணவீக்கம் அமெரிக்காவில் 5%, ஐரோப்பிய ஒன்றியத்தில் 2%, பிரித்தானியாவில் 2.5%, இலங்கையில் 4.1%, இந்தியாவில் 5.2%, சீனாவில் 8.5% என 2021 மே ஏப்ரில்,மே மாதங்களில் இருக்கின்றன. ஜீ-7 நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் பணவீக்கம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படவில்லை. பல பொருளாதார நிபுணர்கள் தற்போது உலகின் பல நாடுகளிலும் நிலவும் பணவீக்கம் தற்காலிகமானது எனக் கருதுகின்றனர்.

மாநாட்டில் முன் வைக்கப்படும் பல தீர்மானங்கள் எல்லா நாடுகளின் ஒருமித்த ஆதரவைப் பெறுவதற்காக பல மாற்றங்களுக்கு உள்ளாகும். ஜீ-7 நாடுகளின் நிதியமைச்சர்களும், நடுவண் வங்கிகளின் ஆளுநர்களும் தங்கள் மாநாட்டை ஜூன்-4ஆம் 5ஆம் திகதிகளில் முடித்துள்ளனர். அவர்கள் தயாரித்துள்ள தீர்மானம் அரசுத் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்படும். அவற்றின் முக்கிய அம்சங்கள்:

  1. பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் பணியை உலகெங்கும் முன்னெடுத்தல்
  2. உலகெங்கும் கோவிட்-19 தொற்று நோயை ஒழித்தால் மட்டுமே அதில் இருந்து எல்லா நாடுகளும் விடுபட முடியும்
  3. எல்லா நாடுகளுக்கும் வாங்கக் கூடிய வகையில் தடுப்பூசி விநியோகித்தல். அதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவித்தல்.
  4. தடுப்பூசிகளை வாங்கத் வறிய நாடுகளுக்கு நிதி வசதி கொடுக்கும்படி பன்னாட்டு நாணய நிதியத்தை வேண்டுதல்
  5. சூழல் பாதுகாப்பிற்கு சிறப்புப் பணிக்குழுவை உருவாக்குதல்
  6. பல்லுயிர்ப் (எல்லா உயிரினங்கள்) பெருக்கத்தை ஊக்குவித்தல்.
  7. பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக முடிவெடுக்கும் போது சூழல் பாதுகாப்பை அவசியமாக்குதல்.

சீனாவை ஜேர்மனி பாதுகாத்ததா?

நிதியமைச்சர்களினதும், நடுவண் வங்கி ஆளுநர்களினதும் அறிக்கையில் சீனா பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. அமெரிக்கா உலக சுகாதார நிறுவனம் கோவிட்-19 தொற்று நோய்க்கிருமிகள் சீனாவில் இருந்து பரப்பப்பட்டதா என்பதைப் பற்றி மீள் விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. அதற்கு ஜேர்மனி உடன்படவில்லை. சீனாவுடனான அமெரிக்காவின் போட்டியில் ஜேர்மனி தம்முடன் இருக்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது என்ற ஜேர்மனி, தம்மால் பக்கச்சார்பாக நடக்க முடியாது என்கின்றது. அது போலவே சீனாவில் வாழும் இஸ்லாமியர்களான உய்குர் இன மக்கள் மீது சீனா பெரும் அட்டூழியத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் கருதுகின்றன. அமெரிக்கா உய்குர் மக்கள் இனக்கொலைக்கு உள்ளாவதாகப் பரப்புரை செய்கின்றது. அதையும் ஜேர்மனி ஏற்கவில்லை. மேலும் அவுஸ்திரேலியாவை பொருளாதார அடிப்படையில் சீனா மிரட்டுவதாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் கருதுகின்றன. அந்தக் கருத்தையும் ஜேர்மனி ஆதரிக்கவில்லை. மாநாட்டு முடிவில் வெளியிடப்படும் இறுதி அறிக்கையில் சீனாவிற்கு எதிரான கருத்து ஏதும் உள்ளடக்கப்பட்டிருக்காவிடில் அதன் பின்னணியில் ஜேர்மனி இருப்பதாக உறுதியாக நம்பலாம். அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் சீனாவிற்கு எதிராக எடுக்கவிருக்கும் பொருளாதார நடவடிக்கைகளால் ஏற்படவிருக்கும் இடைவெளிகளை ஜேர்மனி நிரப்பி பொருளாதார நலன்களை பெற முயல்வதாக அமெரிக்க அரசியல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.

ஜீ-7இன் எதிர்காலம்

2050ஆம் ஆண்டு ஜீ-7 நாடு என்ற பெயர் அதன் விரிவாக்கத்திற்கு ஏற்ப மாற்றப்படும். சீனா, இந்தியா, பிரேசில், இரசியா, மெக்சிக்கோ, இந்தோனேசியா, அவுஸ்திரேலியா உட்பட மேலும் பல நாடுகள் உள்ளடக்கப்படும்.

 

 

Exit mobile version