ஜனாதிபதி வேட்பாளரிடம் வினா எழுப்பிய எம்.பி கட்சி நீக்கம்

ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளில் கட்சியின் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டில், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ராஜாங்க அமைச்சருமான வசந்த சேனநாயக்க, கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும், வசந்த சேனநாயக்க வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்தும் அவரை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வசந்த சேனநாயக்க தற்போது வெளிவிவகார ராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கின்றார்.

சில நாட்களின் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு சில கேள்விகளைக் கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாகும் போது, அமைக்கப்படும் அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படுவாரா? ரவி கருணாநாயக்க மற்றும் றிசாட் பதியுதீன் ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை வழங்குவீர்களா? ஏப்ரல் 21ஆம் திகதி அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவர் உங்களுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன, தொடர்ந்தும் உங்கள் அரசாங்கத்தில் அவருக்கு நீங்கள் ஆதரவு வழங்குவீர்களா? போன்ற கேள்விகளைக் கேட்டு அந்தக் கடிதத்தில் அனுப்பியிருந்தார்.

மேலும், தனது கேள்விகளுக்கு தகுந்த பதில்கள் கிடைக்கவில்லை என்றால், ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிலிருந்து தான் விலகிக் கொள்ளப் போவதாகவும் அந்தக் கடிதத்தில் வசந்த சேனநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், வசந்த சேனநாயக்கவின் அந்தக் கடிதத்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இதுவரை பதிலளிக்கவில்லை.

இந்நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து வசந்த சேனநாயக்க விலக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த அரசியல் சாசன நெருக்கடியின் போது பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்ஸவிற்கு வசந்த சேனநாயக்க ஆதரவு வழங்கி விட்டு, பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் திரும்பி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் பேரன்தான் வசந்த சேனநாயக்க  என்பது குறிப்பிடத்தக்கது.