ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் துமிந்த சில்வா விடுவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா எதிர்ப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொலைக் குற்றவாளி என உயர் நீதிமன்றால் தீர்ப்பு வழங்கப்பட்டவருமான துமிந்த சில்வா, ஜனாதிபதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

துமிந்த சில்வாவின் விடுதலைக்கு, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி.டெப்பிலிட்ஸ் கண்டனம் வெளியிட்டு ருவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் உறுதி செய்த துமிந்த சில்வாவின் தீர்ப்பை தற்போது மன்னிப்பதென்பது சட்டத்தின் ஆட்சியைக் குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை அரசாங்கம் செய்துள்ள ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமமான அணுகல் அடிப்படைக்கு இது விரோதமானது”  என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டமைக்கு அவர் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

Capture 21 ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் துமிந்த சில்வா விடுவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா எதிர்ப்பு

இதேவேளை துமிந்த சில்வா விடுதலைக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. சக அரசியல்வாதியை கொன்ற துமிந்த சில்வாவுக்கான பொது மன்னிப்பானது, தேர்ந்தெடுக்கப்பட்ட, தன்னிச்சையான மன்னிப்பு வழங்கப்படுவதை எடுத்துக் காட்டுகிறது. இது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்தும் என தெரிவித்துள்ளது