செப்டெம்பரிலிருந்து பலாலி விமான நிலையம் தரமுயர்த்தப்படுகின்றது

புனரமைக்கப்பட்டு வரும் பலாலி விமான நிலையம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தொடக்கம் இந்திய துணைக்கண்டங்களுக்கான விமானப் பறப்பை மேற்கொள்ள முடியுமென விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

சென்னை போன்ற இடங்களுக்கான விமான சேவைகள் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், 70 பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானங்களுக்கு இடமளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

விமான ஓடுபாதை புனரமைப்பு, விமான கோபுர அமைப்பு உட்பட பல்வேறு வசதிகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் இரண்டு பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

A 320 விமான போக்குவரத்து வசதிக்காக விமான ஓடுபாதை 3800 மீற்றராக அமைக்கப்படவுள்ளது. ஆனால் செப்டெம்பர் மாதத்திற்குள் 2300 மீற்றர் வேலையே முடிவடையும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை பலாலி விமான நிலையத்திற்கு செல்ல தெல்லிப்பளையிலிருந்து வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதியை அமைத்துத் தரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.