Tamil News
Home செய்திகள் சுமந்திரனின் மீது நடவடிக்கை? மாவை, செல்வம், சித்தர் ஆலோசனை

சுமந்திரனின் மீது நடவடிக்கை? மாவை, செல்வம், சித்தர் ஆலோசனை

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய இரகசிய ஆலோசனையைத் தொடர்ந்து கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மீது நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்களுடன் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் சிலரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் அவசர ஏற்பாடாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுமந்திரனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலக்கவேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறீதரன், ஆகியோரும் கட்சித் தலைவரை நேரில் கேட்டுக்கொண்டதாகவும் அறியவருகின்றது.

பங்காளிக் கட்சிகளின் தலைவர்களினதும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்புக்கள் இரு வேறு நேரங்களில் தமிழரசுக் கட்சியின் தலைவரின் மாவிட்டபுரம் இல்லத்தில் நேற்று இடம்பெற்றன.

நீண்டநேரம் நடந்த இந்தச் சந்திப்புக்களில் சுமந்திரனின் விடயம் தொடர்பில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. அத்துடன் சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதில் அனைத்துத் தரப்பினரும் மிக உறுதியாக இருந்தனர் என அறிய முடிகின்றது என யாழ்ப்பாணச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை” என்று கூறியிருந்தமை சர்ச்சையாக வெடித்திருக்கும் நிலையிலேயே இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

Exit mobile version