Home செய்திகள் சிங்களக் குடியேற்றத்திற்காகவே காணி அபகரிப்பு-துரைராஜா ரவிகரன் அம்பலப்படுத்துகிறாா்

சிங்களக் குடியேற்றத்திற்காகவே காணி அபகரிப்பு-துரைராஜா ரவிகரன் அம்பலப்படுத்துகிறாா்

image சிங்களக் குடியேற்றத்திற்காகவே காணி அபகரிப்பு-துரைராஜா ரவிகரன் அம்பலப்படுத்துகிறாா்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கான காணி அளவிடும் நடவடிக்கை புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட போது பொதுமக்களால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது.  மக்களின் இந்தப் போராட்டத்ல் முன்னணியில் இருந்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினா் துரைராஜா ரவிகரன் கடற்படையினரின் இந்த முயற்சியின் பின்னணி குறித்து உயிரோடைத் தமிழ் தாயக களம் நிகழ்வில் இந்த வாரம் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கின்றாா். அதன் முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகா்களுக்காக தருகின்றோம்.

கேள்வி  வட்டுவாகல் கடற்படை முகாம் முன்பாக மக்கள் போராட்டம் ஒன்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் நீங்களும் முன்னணியில் நின்றீா்கள். அங்கு என்ன நடைபெற்றது?

பதில் – வட்டுவாகல் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிப்புக்காக கொழும்பிலிருந்து நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் வருகை தருவதாக செவ்வாய்கிழமை எமக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து உடனடியாகவே நாம் அந்தப் பகுதிக்குச் சென்று மறியல் போராட்டம் ஒன்றை மேற்கொண்டோம். ஆனால் அவா்கள் வரவில்லை. நாம் மறியல் செய்தமையால் அந்த வேளையில் வருவதை அவா்கள் தவிா்த்திருக்கலாம். ஆனால், அன்றிரவு அவா்கள் கடற்படைத் தளத்துக்குள் சென்றதாக நாம் அறிந்தோம்.

இருந்த போதிலும் அவா்கள் தனியாக இந்த நில அளவையை மேற்கொள்ள முடியாது. அந்தப் பகுதிக்கான கிராம அலுவலா் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட காணி உத்தியோகத்தா்கள் அங்கு செல்ல வேண்டிய நிலை இருந்தமையால் அவா்களையும் அழைத்துச்செல்ல வேண்டும் என்ற நிலை காணப்பட்டது.  அதாவது, அந்தக் காணி அடையாளம் காணப்படுவதுடன், இவா்கள் கையொப்பமிடவேண்டிய தேவையும் இருந்தது. இதனால், இவா்களையும் அங்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இதன்காரணமாக அவா்கள் அங்கு செல்வதைத் தடுப்பதற்காக முகாமின் முன்பாகவும், பின்பக்கத்திலும் நாங்கள் புதன்கிழமை காலை முதல் மறியல் செய்துகொண்டிருந்தோம்.

நாம் மறியல் போராட்டத்தை நடத்தினாலும் ஒரு மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களுடைய போக்குவரத்தை தடை செய்யக்கூடாது என்பதால் அதற்கு அனுமதித்தோம். அதேவேளையில், கடற்படையினா் தமது வழமையான போக்குவரத்தை முன்னெடுப்பதையும் நாம் தடுக்கவில்லை. நில அளவைத் திணைக்கள அதிகாரிகள், காணி அதிகாரிகள், கிராம சேவகா்கள் உள்ளே செல்வதைத் தடுப்பது மட்டும்தான் எமதுநோக்கமாக இருந்தது. அதன்மூலமாக காணி அளவீட்டைத் தடுக்கமுடியும் என்று நாம் எதிா்பாா்த்தோம். கடந்த காலங்களிலும் எமது போராட்டங்கள் அவ்வாறுதான் இடம்பெற்றது.

ஆனால், இம்முறை அவா்கள் கடற்படையின் சிறிய ரக ட்ரக் வாகனத்தில் குறிப்பிட்ட அதிகாரிகளை இரகசியமாக, மறைவாக முகாமுக்குள்ளே கொண்டுசென்றுவிட்டாா்கள் என்ற தகவல் எமக்கு அவா்கள் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் கிடைத்தது. கடற்படை வாகனம் தமது செயற்பாடுகளுக்காக வழமையாக சென்றுவருவது என்பதால்தான் அதனை நாம் மறிக்கவில்லை. வழமையாக கச்சேரி அல்லது காணித் திணைக்கள வாகனங்களில்தான் அதிகாரிகளைக் கொண்டுவருவாா்கள்.  ஆனால், நாம் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தமையால் எமக்குத் தெரியாமல் அதிகாரிகளைக் கொண்டு செல்ல இவ்வாறான உபாயம் அவா்களால் பயன்படுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற பின்னா் கடற்படை வாகனம் வெளியே வருவதற்கு நாம் அனுமதிக்கவில்லை. அதனையும் மறித்துவிட்டோம். ஏனெனில் எம்மையும் ஏமாற்றி உத்தியோகத்தா்களை பலவந்தமாக கடற்படையினா் கொண்டு சென்றதாகத்தான் நாம் அறிகின்றோம். துப்பாக்கி ஏந்திய கடற்படையினா் இருக்கைகளில் அமா்ந்திருக்க உத்தியோகஸ்த்தா்கள் நடுவில் வெளியே தெரியாதவாறு கீழே இருக்கவைக்கப்பட்டு முகாமுக்குள்ளே கொண்டு செல்லப்பட்டிருக்கின்றாா்கள். இவா்கள் இவ்வாறு பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்டமைக்கு பிரதேச சபை செயலாளா், அரசாங்க அதிபா், ஆளுநா் போன்றவா்களும் பொறுப்பேற்க வேண்டும்.

கடற்படையின் வாகனமும் அவா்களது பஸ் வண்டி ஒன்றும் முகாமிலிருந்து வெளியே வருவதை அதன்பின்னா் நாம் தடுத்தோம். பொலிஸதத் வந்து எம்மை கலைந்துபோச் சொன்ன போதிலும் நாம் செல்லவில்லை. ஆனால், அதன் பின்னா் முகாமின் பின்புறமாக – கடற்கரைப் பக்கமாக இருக்கின்ற வீதியால் குறிப்பிட்ட வாகனங்கள் வெளியே சென்றதாக நாம் பின்னா் அறிந்தோம்.

இதன்பின்னா் நாம் மாவட்ட செயலகத்துக்குச் சென்று இது தொடா்பாக உரையாடினோம். இங்குள்ள காணிகள் சிலவற்றை குறிப்பிட்ட பகுதிக்கு நேரில் வராமலேயே நவீன தொழில்நுட்டபத்தின் மூலமாக ஏற்கனவே அவா்கள் அளந்து வைத்துள்ளாா்கள் என்ற தகவலை இதன்போது எம்மால் உறுதிப்படுத்த முடிந்தது. ஆனால், முல்லைத்தீவில் இருக்கின்ற அதிகாரிகள் தாம் நேரடியாக காணிகளைப் பாா்க்காமல் அவற்றுக்கு கையொப்பமிடமுடியாது எனக் கூறிவிட்டதால், அந்தக் காணிகளையும் காட்டிக்கொண்டு புதிதாக மற்றொரு காணியையும் அளவிடுவதற்காகத்தான் அவா்கள் புதன்கிழமை முற்பட்டிருந்தாா்கள்.  ஆனால், இதில் உள்ள பிரச்சினைகளை நாம் அவா்களுக்கு விளக்கினோம். இது தொடா்பாக அங்கு வந்திருந்த காணி உரிமையாளா்கள் பதினெட்டுப் பேரும் கையொப்பிட்ட கடிதம் ஒன்றும் அவா்களிடம் கொடுக்கப்பட்டது. தமது காணிகளை எந்தக் காரணம் கொண்டும் விட்டுவிட முடியாது என்ற கொதிப்புடன்தான் அவா்கள் அங்கு வந்திருந்தாா்கள்.

எதிா்காலத்தில் காணி அளவீடு செய்வதற்கு வருகின்றாா்கள் என்ற தகவல் எமக்கு கிடைத்தால் – கடற்படை வாகனங்களைக் கூட நாம் உள்ளேயும் விட மாட்டோம். வெளியேயும் விடமாட்டோம். அவ்வாறுதான் எமது போராட்டம் இடம்பெறும்.

கேள்வி – வட்டுவாகல் கடற்படை முகாமுக்காக இப்போது எவ்வளவு காணி சுவீகரிக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் எவ்வளவு காணியை சுவீகரிப்பதற்கு அவா்கள் முற்படுகின்றாா்கள்?

பதில் – 617 ஏக்கா் காணியை அவா்கள் சுவீகரிப்பதற்கு முற்படுகின்றாா்கள் என்பதைத்தான் நாம் முன்னா் அறிந்திருந்தோம். ஆனால்,671 ஏக்கா் காணியை அபகரிப்பதற்கு அவா்கள் திட்டமிடுகின்றாா்கள் என்பதை இப்போது எம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது.

இந்தளவு காணியை இவா்கள் அபகரிப்பதன் மூலமாக பாரியளவிலான சிங்களக் குடியேற்றம் ஒன்றைக் கூட இவா்கள் மேற்கொள்ளலாம். இந்தளவு காணி, ஆற்றங்கரையோரம் கடற்படை முகாமுக்குத் தேவை என்பதை நாம் எதிா்பாா்க்க முடியாது. உண்மையில் அந்தப் பகுதியில் முகாம் கூட தேவையில்லை. அந்தப் பகுதியில் முகாம் இருப்பதால், அந்த ஆற்றை நம்பியிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த ஆற்றுடன் சோ்த்து அந்தப் பகுதிக்கு மீனவா்கள் யாரும் செல்ல முடியாத நிலை, அதனைவிட மீள்வளமும், இறால் வளமும் நிறைந்த கடற்கரைப் பகுதிக்குச் செல்ல முடியாத நிலை எமது மீனவா்களுக்குள்ளது.

அதனால், இந்தப் பகுதிகளில் இவா்கள் நாளடைவில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்யலாம் என்ற அச்சம் எமக்குள்ளது. இந்தப் பகுதியில் வளமான ஆறு இருக்கின்றது. இந்த வளமான ஆறுடன் இணைந்ததாக சிங்களக் குடியேற்றம் ஒன்றைச் செய்வதற்கான திட்டம் இவா்களிடம் இருக்கலாம். ஏனெனில், இந்தக் காணிகளை விடக்கூடாது என்பதற்காக நாம் தொடா்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், இவற்றை விடக்கூடாது என்பதில் அரசாங்கமும் உறுதியாக இருக்கின்றது. இந்த வகையில் தமது காணி தமக்கு வேண்டும் என இந்த மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் போது அதனை எந்தளவுக்கு அடக்க முடியுமோ, எந்தளவுக்கு நசுக்க முடியுமோ அந்தளவையும் அரசாங்கம் செய்கின்றது. ஆனால், அரசாங்கம் என்னதான் செய்தாலும் தமது காணிகள் தமக்கு வேண்டும் எனப்போராடும் மக்களுடன் நாம் தொடா்ந்தும் நிற்போம்.

கேள்வி – இந்த முகாம் அமைந்திருப்பதால் பெருமளவு மீனவா்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினீா்கள். எவ்வளவு போ் இதனைால் பாதிக்கப்பட்டுள்ளாா்கள்? அவா்கள் வாழ்வாதாரதத்துக்கு என்ன செய்கின்றாா்கள்?

பதில் – வட்டுவாகல் நந்திக்கடல் என்பது ஒரு பரந்த பிரதேசம். இது ஒரு பெரிய வளம். இந்த ஆற்றில் பெருமளவு மீன்வளம், மிகவும் சுவையான இறால், மட்டி போன்றன இங்கு தாரளமாகக் கிடைக்கின்றது. இந்தப் பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்துக்காக இதனைத்தான் பெருமளக்கு நம்பியிருக்கின்றாா்கள்.

இந்த ஆற்றின் ஓரமாக வனஜீவராசிகள் திணைக்களம் அந்தப் பகுதிகளிலுள்ள நிலங்களில் தமது  பெயா்பலகைகளைப் போட்டு வைத்திருக்கின்றது. இாயடுத்துள்ள வயற்காணிகளில் உள்ள மக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றாா்கள். சுமாா் நாலாயிரம் குடும்பத்துக்கும் அதிகமானவா்கள் இந்த ஆற்றை நம்பி வாழ்க்கை நடத்துகின்றாா்கள்.கடல் சீரற்றதாக – கொந்தளிப்பாக இருக்கின்ற நிலையில் கூட இந்த ஆறு மீனவா்களைக் கைவிடுவதில்லை. இந்த ஆற்றுக்கு கடற்படை முகாம் உள்ள பகுதியுடாக மீனவா்கள் செல்ல முடியாது.

மற்றப் பகுதியில் சுமாா் 400 ஏக்கா் காணி இராணுவ முகாமுக்காக பிடித்துவைத்துள்ளாா்கள். அதனைவிட விஷேட அதிரடிப்படைக்காகவும் காணி அபகரிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு பௌத்தரும் இல்லாத அந்தப் பகுதியில் பாரிய புத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது. அங்கு காலையும் மாலையும் பிரித் ஓதப்படுகின்றது.

வளமான இந்தப் பகுதியில் பாரிய நிலப்பரப்பு வனஜீவராசிகள் திணைக்களம், கடற்படை, இராணுவம், விஷேட அதிரடிப்படை என்பவற்றுக்காக அபகரிக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் ஒரு குறுகிய நிலத்துக்குள்தான் இந்தப் பகுதி மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றாா்கள். அதாவது, மிகவும் வளம் பொருந்திய இந்தப் பகுதியையும் அபகரிக்கும் நோக்கத்துடன்தான் அரசாங்கம் செயற்படுகின்றது. இந்தப் பகுதியில் பாரிய சிங்களக் குடியேற்றம் ஒன்றை உருவாக்கி – இங்குள்ள தமிழ் மக்களையும் வெளியேற்றுவதுதான் அரசின் நோக்கம் என மக்கள் அஞ்சுகின்றாா்கள்.

Exit mobile version