Home செய்திகள் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி

கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி

பேலியகொட மீன்சந்தை கொரோனா தொற்றுடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்புடைய இரண்டாம் கட்ட தொடர்பாளர்கள் 500 பேர் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தொற்று பரவாமலிருக்க இறுக்கமான தீர்மானங்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டம் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு. க. கருணாகரன் தலைமையில் இன்று  மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

DSC 0357 கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி

இதன்போது தொற்று அபாயம் நிலவும் பிரதேசங்களில் அரச திணைக்களங்களில் 15 தொடக்கம் 20 வரையான உத்தியோகத்தர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படவுள்ளதுடன் ஏனைய பகுதிகளில் சுகாதார நடைமுறைகளைப் பேணி செயற்பட அனுமதிக்கபட்டுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் ஒருவாரத்திற்கு சகல மதத்தலங்களில் மக்கள் ஒன்றுகூடும் வழிபாடுகளை இடைநிறுத்தவும் மிக அவசியமாக நடாத்தப்படவிருப்பின் மதகுரு உட்பட ஐவர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.

மேலும் சிகை அலங்கார நிலையங்கள் உடன் செயற்படும் வண்ணம் மூடப்படவேண்டும்.

ஏற்கனவே தீர்மனிக்கப்பட்ட திருமண நிகழ்வுகளுக்கு அப்பகுதி சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கமைவாக செயற்படுவதுடன், மரணங்கள் ஏற்படின் 15 பேர் மாத்திரம் நல்லடக்க நிகழ்வில் கலந்து கொள்ளமுடியும்.

இதுதவிர நகர்ப்புறங்களான மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி போன்ற பிரதேசங்களில் சனநடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தவும் வர்த்தக நிலையங்களில் அனைத்துவிதமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்படும்.

சந்தைகளை திறந்த மைதானங்களில் நடாத்துவதுடன், உணவகங்களில் உட்காந்து உண்பதற்கு 50 வீதம அனுமதிக்கப்படுவர். பொதுப் போக்குவரத்தில் ஆசனங்களுக்கு அளவான பயணிகளையே ஏற்றப்படல் வேண்டும்.

இவற்றுக்கு மேலதிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மக்கள் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் நடமாடும் காவல் பிரிவு செயற்படுவதுடன் பொதுமக்கள் இருவருடன் அரச உத்தியோகத்தர்கள் மூவரும் இணைப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் நடைமுறையை மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விசேட பணிகள் அங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இந்த மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, பொலிஸ், இராணுவம் மற்றும்  பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Exit mobile version