Tamil News
Home செய்திகள் கோத்தபயாவை கொல்ல சதி செய்ததாக வடக்கு கிழக்கில் ஐந்து பேர் கைது.

கோத்தபயாவை கொல்ல சதி செய்ததாக வடக்கு கிழக்கில் ஐந்து பேர் கைது.

கோத்தபயாவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக வன்னி, மலையகம் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கோத்தபயா ராஜபக்ஸவை கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து கொலை செய்ய முயற்சித்தார்கள் என வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் உட்பட ஐந்து பேர் கட்டுநாயக்க பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜயவர்த்தனபுர சீதுவ பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த முகமது றிப்கான், கிளிநொச்சி அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கணேசலிங்கம், மதன், விசுவமடு தர்மபுரத்தைச் சேர்ந்த வேலு கோணேஸ்வரம், விசுவமடு கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த குணரத்னம் நகுலேஸ்வரன், மற்றும் மஸ்கெலியாவைச் சேர்ந்த ஆரியராஜன் கமலராஜா ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

இவர்கள் ஐவரும் ஒன்றிணைந்து மதுபானம் அருந்தியபடி இந்த சூழ்ச்சித் திட்டத்தை தீட்டியுள்ளனர். இதில் பிரதான சூத்திரதாரியான றிப்கான் என்பவர் இனங்காணப்பட்டுள்ளார். இவர் வெளிநாடுகளில் வேலை செய்தவர்.

அத்துடன் முஸ்லிம் அமைச்சரின் நெருங்கிய தொடர்பும் இவருக்கு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சிக்கினால் குறித்த அமைச்சரின் செல்வாக்கு மூலமாக வெளிவர முடியும் என அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மதன் என்னும் சந்தேக நபருடைய சகோதரிகள் இருவர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனவும் அவர்களில் ஒருவர் இதுவரை புனர்வாழ்வு அளிக்கப்படாதவர் எனவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

Exit mobile version