Home செய்திகள் கோட்டாபாய கடற்படை முகாம் அதிகாரி மீது தாக்குதல்- ஊடகவியலாளரிடம் இன்று விசாரணை

கோட்டாபாய கடற்படை முகாம் அதிகாரி மீது தாக்குதல்- ஊடகவியலாளரிடம் இன்று விசாரணை

கோட்டாபாய கடற்படை முகாம் அதிகாரியின் மீது தாக்குதல் நடத்தியதாக ஊடகவியலாளர் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று முல்லைத்தீவு நீதிமன்றில்.

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டாபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகள் இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெறுகின்றது.

IMG 6983 கோட்டாபாய கடற்படை முகாம் அதிகாரி மீது தாக்குதல்- ஊடகவியலாளரிடம் இன்று விசாரணை

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.19 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.

இதன்போது செல்வபுரம் பேருந்து தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும் , ஊடகவியலாளர்களையும் இனம் தெரியா நபர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்ததோடு தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்தார்.

இதனையடுத்து அவரை ஆர்ப்பாட்டகாரர்கள் அடையாளப்படுத்த முற்பட்டவேளை ஊடகவியலாளாரான சண்முகம் தவசீலன் தலையிட்டு குறித்த நபர் யார் என்று வினவியபோது அவர் தான் யார் என சொல்ல மறுத்து குறித்த இடத்தினை விட்டு தப்பி ஓடிய போது ஆர்ப்பாட்ட காரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரித்த போது தான் கடற்படை அதிகாரி என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து முல்லைத்தீவு கால்துறையினரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அவர்கள் குறித்த இடத்திற்கு வர தாமதமான நிலையில் குறித்த நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டபாய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா என அடையாளப்படுத்தியபோது கடற்படையினர் அவர் தங்களுடைய நபர் என தெரிவித்ததனையடுத்து குறித்த இடத்திற்கு வருகைதந்த காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் குறித்த கடற்படை அதிகாரி ஊடகவியலாளரை பழிவாங்கும் நோக்கில் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் உண்மைக்கு புறம்பான கருத்தினை தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் 20.04.19 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளரான தவசீலனை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version