Tamil News
Home செய்திகள் கொரோனா சிகிச்சைக்காக வடக்கில் நிலையங்கள்; யாழ், கிளிநொச்சியில் அமைக்கப்படுகிறது

கொரோனா சிகிச்சைக்காக வடக்கில் நிலையங்கள்; யாழ், கிளிநொச்சியில் அமைக்கப்படுகிறது

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கொரோனா சிகிச்சை நிலையங்கள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய அமைக்கப்பட்டு வருகின்றன.

அதில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான கொரோனா சிகிச்சை நிலையமாக மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை தெரிவு செய்யபட்டு அங்கு கிச்சைப் பிரிவு அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிவரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மருந்தங்கேணி ஆரம்ப வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக தயார் நிலையில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் இனங்காணப்பட்டால் மருந்தங்கேணி கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்படுவார் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள கட்டடத் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சுனாமி, போர் உள்ளிட்டவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மருதங்கேணியில் கொரோனா சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படுவது தொடர்பில் கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

மயிலிட்டி காசநோய் சிகிச்சை நிலையம் மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலை என்பன மக்கள் அடர்த்தி குறைந்த இடங்களில் உள்ள நிலையில் வசதிகள் குறைந்த மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையைத் தேர்ந்தெடுத்தமை தொடர்பில் சில தரப்புகளால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்துக்கான கொரோனா சிகிச்சை நிலையம் கிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்படுகின்றது. இரு வாரங்களுக்குள் அந்த அமைப்புப் பணிகளை நிறைவு செய்யுமாறு சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 100 படுக்கைகளைக் கொண்டதாக இந்த கொரோனா சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி நிலையமாக இருந்து தற்போது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஆளுகைக்குள் இருக்கும் காணியிலேயே இந்த சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகிறது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்திலும் பல வைத்தியசாலைகள் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்படுகின்றன.

Exit mobile version