Tamil News
Home செய்திகள் கொரோனாவை ஒழிக்க மந்திரப் பானையுடன் அலைந்த அமைச்சர்!

கொரோனாவை ஒழிக்க மந்திரப் பானையுடன் அலைந்த அமைச்சர்!

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மந்திரவாதி மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு செயற்படும் சுகாதார அமைச்சரின் செயலால் சர்வதேசத்தின் மத்தியில் நாடு நகைப்பிற்குரியதாக மாறியிருக்கிறது என்று முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சுமத்தியுள்ளார்.

முன்னதாக கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட மதவழிபாடுகளில் ஈடுபடுமாறு மதத் தலைவர்களிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, மதச் சடங்குகளில் ஈடுபடும் புகைப்படம் வெளியாகின.

மேலும் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக ஆற்றுநீரில் பானையை வீசிய சுகாதார அமைச்சரின் செயல் குறித்து விமர்சனங்கள் கேலிசெய்யும் கருத்துக்களும் வெளியாகியுள்ளன.

இதையடுத்து சுகாதார அமைச்சரின் இந்த செயலைக்கண்டித்து தனது ட்விட்டரில், மந்திரவாதி மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு செயற்படும் சுகாதார அமைச்சரின் செயலால் சர்வதேசத்தின் மத்தியில் நாடு நகைப்பிற்குரியதாக மாறியிருக்கிறது என்று முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சாடியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரசினைக் கட்டுப்படுத்த கடவுளின் அருளை பெறுவதற்காக தான் மேற்கொண்ட செயல் அது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் நியாயப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version