கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு பரவாதிருக்க நடவடிக்கைத் தேவை-சி.யமுனாநந்தா

கொரோனா தொற்றினை தடுக்க முக கவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும் இல்லாது செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதைய டெங்கு தொற்று நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“தற்போது டெங்கு நோயானது யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள பரவ ஆரம்பித்துள்ளது. நேற்று மட்டும் 5 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் பாசையூர், சுழிபுரம், சுன்னாகம், அரியாலை மற்றும் கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் நுளம்பு பெருக்கம் அதிகமாக காணப்படும். எனவே யாழ் மாவட்ட மக்கள் சுற்றுச் சூழலினை மிகவும் தூய்மையாக பேண வேண்டியது அவசியமாகும். குப்பைகள்,பிளாஸ்டிக் போன்றவற்றினை இல்லாமல் செய்வதன் மூலம் டெங்கு நுளம்பு பெருகுவதனை கட்டுப்படுத்தலாம்.

அடுத்ததாக டெங்கு நுளம்பு கடிக்கும் நேரமான காலை 9 மணி வரை அதேபோல் மாலை 4 தொடக்கம் 6 மணி வரை இருக்கும். சிறு பிள்ளைகளுக்கு நுளம்பு கடிக்காமல் இருப்பதற்காக ஆடைகளை உடம்பு முழுவதுமாக போட வேண்டும்.

தற்போது நாட்டில் கொரோனா தொற்றும் அதிகரித்துள்ள நிலையில், டெங்கு தொற்றும் ஏற்படுமாயின் இரட்டை நோய் தொற்று ஏற்பட்டு விடும். மேலும் தொற்றுக்குள்ளானவர்களை சிகிச்சையளிக்க வைத்தியசாலைகள் நெருக்கடிக்குள்ளாகும். எனவே பொது மக்கள் உரிய காப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் டெங்கு பெருகும் சூழலை எமது பிரதேசத்தில் இல்லாமல் செய்வதன் மூலமும் டெங்கு தொற்று ஏற்படுவதனை தடுக்க முடியும்.

குறிப்பாக வீடுகளுக்கு வெளியே உள்ள புற்கள் புதர்களை சுத்தப்படுத்தி வைத்திருத்தல் வேண்டும். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலானவர்கள் வீடுகளிற்கு வெளியில் வீதிகளில் குப்பைகளை பொறுப்பற்ற விதத்தில் போடுகின்றார்கள். இது நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவாக அமையலாம்.

எனவே பொதுமக்கள் கொரோனா தொற்று ஏற்படா வண்ணம் முககவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையும் இல்லாது செய்தல் வேண்டும். இவ்வாறு செய்வதனால் நமக்கு ஏற்படக்கூடிய அனாவசியமான இழப்புக்கள், உயிரிழப்புகளை தவிர்க்கலாம்” என்றார்.