கைது செய்யப்பட்ட வியாழேந்திரனுக்கு 1 ஆம் திகதிவரை விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2024 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி, மண் அகழ்விற்கு அனுமதி பெற்றுத் தருவதாக வர்த்தகர் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் பிரதேச அமைப்பாளர் ஆகிய இருவரையும் மட்டக்களப்பு கல்லடி கடற்கரைப்பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் கைது செய்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சரிடம் விசாரணைகளை மேற்கொண்டுவந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் குறித்த சம்பவத்துக்கு உடந்தையாக அமைச்சர் இருந்துள்ளார் என கண்டறிந்தனர். இந்த நிலையில் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்த நிலையில் அமைச்சரின் செயலாளரின் வழக்கு விசாரணைக்காக செயலாளர், அமைப்பாளருடன் சம்பவ தினமான நேற்று செவ்வாய்க்கிழமை புதுக்கடை நீதிமன்ற பகுதிக்கு முன்னாள் அமைச்சர் சென்றுள்ள நிலையில், அவரை அங்கு வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அமைச்சரை புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, கடந்த 2022ம் ஆண்டு யூன் 21ம் திகதி வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளராக இருந்த அவரது சகோதரர் 15 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய நிலையில் மட்டக்களப்பு நகரிலுள்ள உணவகம் ஒன்றில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.