இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிப்பது குறித்து இராணுவமே இறுதி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு படைகள் வசமுள்ள காணிகள் எவை என் பது குறித்து கூட்டமைப்பினர் எழுத்துமூல அறிக்கையை தர வேண்டும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டமைப்பு தெரிவித்துள்ளதுடன் இடை நடுவே பேச்சுவார்த்தையை விட்டும் வெளியேறியிருக்கிறார்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரச அதிகாரிகள் பாதுகாப்பு தளபதிகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பங்கேற்ற இந்த சந்திப்பு எந்தவித ஆரோக்கியமான முன்னகர்வுகளும் இல்லாது முடிவுக்கு வந்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப் புணர்வுடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
வடக்கில் இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவித்தல் மற்றும் மகாவலி அதிகாரசபை, வனப்பாதுகாப்பு திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களங்களின் மூலமாக வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு விடயங்கள் குறித்து ஆராயும் நோக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு நேற்று காலை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன், சார்ல்ஸ் நிர்மலநாதன், சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராச ஆகியோர் மாத்திரமே கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தில் முற்பகல் 11 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற்ற நிலயைில் கூட்டம் ஆரமிக்கப்பட்டு சில நிமிடங்களில் வேறு அலுவல் ஒன்றுக்காக ஜனாதிபதி கூட்டத்தை விட்டு வெளியேறியதுடன் பாதுகாப்பு அதிகரிகள் அரச அதிகாரிகள் மட்டுமே கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.
நீண்ட நேரமாக அரச அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைகளை நடத்திய கூட்டமைப்பினர் அதிருப்தியுடன் இருந்ததுடன் சில வாக்குவாதங்களையும் நடத்தியுள்ளனர். குறிப்பாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இந்த கூட்டத்தில் ஆக்கபூர்வமான நோக்கங்கள் ஒன்றும் இல்லை எனவும், ஜனாதிபதி பொறுப்பில்லாது நடந்துகொள்வதாக கூறி இடை நடுவே கூட்டத்தை விட்டு வெளியேறியிருந்தார். நீண்ட நேரத்தின் பின்னர் மீண்டும் கூட்டத்திற்கு வந்த ஜனாதிபதி சிறிது நேரம் கலந்துரையாடிய நிலையில் நீண்ட நேரமாக பேசிவிட்டோம் கூட்டத்தை முடித்துக்கொள்ளலாம் என கூறி வெளியேறியுள்ளார்.
எவ்வாறு இருப்பினும் இந்த சந்திப்பில் கூட்டமைப்பினர் தமக்கு ஜனாதிபதியுடன் சந்திக்கக்கிடைத்த நேரத்தில் முக்கியமான காரணிகளை எடுத்துக்கூறியுள்ளனர். இதன்போது வடக்கில் பாதுகாப்பு படைகள் வசம் தொடர்ந்தும் தக்கவைத்துள்ள காணிகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினர்.
வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு படையினர் பொதுமக்களின் காணிகளை வசப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கேப்பாபிலவு பகுதியில் இப்போதும் பொதுமக்களின் 72 ஏக்கர் காணிகள் பாதுகாப்புபடைகள் வசம் உள்ளன. மன்னார் மாவட்டத்தில் அதிகளவிலான காணிகள் இராணுவம் தன்வசப்படுத்திவைத்துள்ளது. பொதுமக்கள் காணிகள் என கடந்த 2008ஆம் ஆண்டில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் வர்த்தமானிபடுத்தப்பட்ட காணிகள் கூட இன்னமும் விடுவிக்கப்படாது உள்ளன. இவை குறித்து எந்தவொரு முன்னர்வுகளும் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும். மகாவலி அபிவிருத்தி சபை மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களம் என்பன தொடர்ந்தும் காணிகளை அபகரித்து வருகின்றது என்பதையும் மன்னார் மாவட்ட எம்.பி சார்ல்ஸ் நிர்மலநாதன் எடுத்துக்கூறியிருந்தார்.
அதேபோன்று கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இவ்வாறு காணிகள் இராணுவம் வசம் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. ஏழு தலைமுறையாக பொதுமக்கள் வசமிருந்த காணிகளை இன்று எவ்வாறு இராணுவத்தின் காணிகள் என உரிமைகோர முடியும். இவை நியாயமான கருத்துக்கள் அல்ல. அதேபோன்று மகாவலி அபிவிருத்தி என கூறிக்கொண்டு புதிதாக காணிகளை தன்வசப்படுத்தும் வர்த்தமானிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணிகளை ஸ்ரீதரன் எம்.பி சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை கேப்பாபிலவு காணிகளை விடுவிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்தும் எமது மக்கள் போராடிக்கொண்டு இருக்க முடியாது ஆகவே ஒரு உறுதியான பதில் வேண்டும் என்ற காரணிகளை பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராச சுட்டிக்காட்டியிருந்தார். அதேபோல் மாவை சேனாதிராஜா எம்.பியும் மயிலிட்டி, பலாலி பகுதிகளில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார். மயிலிட்டி பிரதேசத்தில் 1500 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறித்தும் மாவை சேனாதிராஜா எம்.பி எடுத்துக்கூறியிருந்தார்.
எனினும் காணி விடுவிப்பு விவாகரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல காரணிகளை முன்வைத்தும் ஜனாதிபதி அதற்கான அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை என்ற கருத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
வடக்கில் படையினர் வசமுள்ள காணிகள் என்ன என்பதையும் எத்தனை ஏக்கர் காணிகள் உள்ளன என்பதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எழுத்து மூலம் அறிவித்தால் அது குறித்து கவனம் செலுத்த முடியும் என்பதை ஜனாதிபதி கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார். அத்துடன் இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதை இராணுவமே தீர்மானிக்க வேண்டும் எனவும் வடக்கில் இராணுவம் வசமுள்ள காணிகள் குறித்த இறுதி நிலைப்பாட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் பாதுகாப்பு தரப்பினர் தனக்கு அறிவிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி பலாலி காணி விவாகரத்தில் உரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டு ஒரு முடிவினை எடுக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஏனைய காணிகள் குறித்த விவகாரங்கள் தொடர்பில் ஆராய எதிர்வரும் 12 ஆம் திகதி வடக்கு ஆளுநருடன் சந்திப்பொன்று ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இந்த அந்திப்பு ஆக்கபூர்வமான ஒன்றாக இருக்கவில்லை என்பதையும் பல தடவடிகைகள் வடக்கின் காணி விடுவிப்பு குறித்து ஜனாதிபதிக்கு உரிய காரணிகளை தெரிவித்தும் எழுத்துமூலம் கேட்பது வேடிக்கையான ஒன்றாகவும் எம்மீது அவருக்கு அக்கறை இல்லை என்பதையுமே வெளிப்படுத்தியுள்ளது எனவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை .