குழந்தைகளை குற்றவாளிகளைப் போல நடத்தும் மலேசியா- வலுக்கும் எதிர்ப்பு

மலேசியாவின் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள குழந்தைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் ஐ.நா. அகதிகள் முகமையை முகாம்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் மலேசிய அரசை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. 

மலேசிய உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய கணக்குப்படி, 756 குழந்தைகள் தடுப்பு முகாம்களில் உள்ளனர். இதில் மியான்மரைச் சேர்ந்த 326 குழந்தைகள் பெற்றோரோ பாதுகாவலரோயின்றி சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 2019 முதல் ஐ.நா. அகதிகள் முகமையை முகாம்களுக்குள் அனுமதிக்க மலேசிய அரசு மறுத்து வருவதால், இக்குழந்தைகள் அகதிகளாகப் பாதுகாப்பு பெற தகுதியுடையவர்களா என்பதை ஐ.நா. தரப்பினரால் தீர்மானிக்க இயலவில்லை எனக் கூறப்படுகின்றது.

“இட நெருக்கடிமிக்க மற்றும் சுகாதாரமற்ற தடுப்பு முகாம்களில் பெருமளவிலான குழந்தைகளை மலேசியா சிறைவைத்திருப்பது அச்சுறுத்துவதாக உள்ளது,” எனக் கூறுகிறார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை இயக்குனர்(ஆசியா) பில் ரோபர்ட்சன்.

“இக்குழந்தைகளில் பலர் மியான்மரில் நிகழ்ந்த அட்டூழியங்களிலிருந்து தப்பியவர்கள். இவர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, குற்றவாளிகளைப் போல நடத்தக்கூடாது,” என அவர் தெரிவித்திருக்கிறார்.