கிழக்கு முனையம் இந்தியாவுக்கா? அமைச்சர்கள் பலர் எதிர்ப்பு! விமல் தலைமையில் அவசர கூட்டம்

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் திட்டத்துக்கு அரசுக்குள் அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

நாளை திங்கட்கிழமை அமைச்சரவையில் கிழக்கு முனையத்தை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப் படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள அமைச்சர் விமல் வீரவன்ஸ உள்ளிட்ட குழுவினர், அவ்வாறாக அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டால் அதற்கு எதிர்ப்பு வெளியிடத் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று அமைச்சர் விமல் வீரவன்ஸவின் இல்லத்தில் அமைச்சர் உதயகம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண உள்ளிட்ட – கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள – அரச தரப்பில் இருக்கும் கட்சிகளின் தலைவர்களுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றுள்ளது.