Home செய்திகள் காணி தொடர்பான பிணக்குகளை தீர்த்தாலே இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் -ஜானு முரளிதரன்

காணி தொடர்பான பிணக்குகளை தீர்த்தாலே இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் -ஜானு முரளிதரன்

காணி தொடர்பான பிணக்குகளை இலகுவாக தீர்த்துவைப்பதன் ஊடாக இனங்களிடையே சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் விரைவாக ஏற்படுத்தமுடியும் என சிறந்த எதிர்காலத்திற்கான உள்ளூர் முயற்சிகள் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜானு முரளிதரன் தெரிவித்தார்.

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினை உறுதிசெய்யும் காணி பிணக்குகளுக்கான விசேட மத்தியஸ்த முயற்சிகள் என்னும் தொனிப்பொருளிலான இரண்டுநாள் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் ஆரம்பமானது.

IMG 0017 காணி தொடர்பான பிணக்குகளை தீர்த்தாலே இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் -ஜானு முரளிதரன்

உள்ளூர் முயற்சிகள் அமைப்பின் ஏற்பாட்டில் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் இந்த செயலமர்வு ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மத்தியஸ்த சபையின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான செயலமர்வாக இது நடைபெற்றது.

காவல் நிலையங்களினால் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் வழக்குகள் மத்தியஸ்தசபை ஊடாக தீர்த்துவைப்பதற்காக அனுப்பிவைக்கப்படும் நிலையில், குறித்த வழக்குகளை விரைவாகவும் சமூக முரண்பாடுகள் ஏற்படாமலும் தீர்த்துவைப்பதற்கு மத்தியஸ்தசபை தலைவர்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையிலான திரண் அபிவிருத்தியை நோக்காக கொண்டு இந்த செயலமர்வு நடாத்தப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் அனைத்து மத்தியஸ்தசபைகளை பலப்படுத்தி அதன் சேவைகளை விரிவுபடுத்தவும் மக்கள் அதன் மூலம் விரைவாகவும் சிறப்பாகவும் பயனடையும் வகையில் செயற்பாடுகளை முன்கொண்டுசெல்லும் வகையில் அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு உள்ளூர் முயற்சிகள் அமைப்பு செயற்படவுள்ளதாகவும் உள்ளூர் முயற்சிகள் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜானு முரளிதரன் தெரிவித்தார்.

Exit mobile version