கப்டன் பண்டிதர் எமது விடுதலை அமைப்பின் மூத்த உறுப்பினரும் அவரது ஆழுமையும் வழிகாட்டலும் – கௌரிசங்கர்

எமது விடுதலை அமைப்பின் அத்திவாரம் போடப்பட்ட போது ரவீந்திரன் என்ற இயற் பெயரைக் கொண்டவரின் ஆழுமையும் அறிவும் பண்பும் ஒருங்கே அமைந்திருந்ததால் எல்லா மூத்த உறுப்பினர்களும் அவரைப் பண்டிதர் என்றே அழைத்தனர். முதல் மாவீரரான சங்கரின் அயல் வீட்டினரும் நெருங்கிய நண்பருமான பண்டிதர் வசதி படைத்த குடும்பத்தில் பிறக்காவிடினும் தமிழ் மக்களின் விடுதலைக்காக நேர்மையுடனும் கடமை கண்ணியத்துடனும் செயற்பட்ட ஒரு சிந்தனையாளர்.

நான் பண்டிதர் என்ற உயர் சிந்தனை கொண்டவரை 1981 ஆரம்ப காலங்களில் சந்தித்த போது மிகவும் பயத்துடனேயே சந்தித்தேன். அந்த முதல் சந்திப்பிலேயே அந்தப் பயம் முற்றாக நீங்கி விட்டிருந்தது. தெத்திப்பல், அமைதியான பேச்சு. புன்சிரிப்பு, புலிகளின் உறுப்பினர்கள் எப்படி இருப்பார்கள் என்ற எமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட எளிமையான மிகச் சாதாரண மனிதராகவே அறிமுகமாகி அவ்வாறே வாழ்ந்தார். பின்பு அவரை கல்வியங்காட்டிலிருந்த நீர்ப்பாசனத்துறை அலுவலகத்தில் அநேகமாக ஒவ்வொரு நாளும் பிற்பகலில் சந்திப்போம். பல இளையவர்களை எமது போராட்டத்தில் இணைப்பதற்காக பண்டிதரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். பண்டிதரால் துண்டுப்பிரசுரங்கள் கொடுக்கின்ற பணியும் என்னிடம் தரப்பட்டது.

அப்போது எமது இயக்கத்தில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதனைப் பெற்றுக் கொள்கின்றவர்கள் பெருமையாக மகிழ்வதைப் பார்க்கின்ற போது துண்டுப் பிரசுரங்களை வழங்குகின்ற எமக்கும் பெரிய மகிழ்வாக இருக்கும். பண்டிதர் வல்வெட்டித்துறை வந்து மீண்டும் யாழ் செல்லும் போது மண்டான் என்ற சிறிய கிராமம் வழியாக சிறிய ஆற்றைக் கடந்து கப்பூது என்ற சிறிய கிராமம் வழியாகச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். அப்போது ஆற்றின் நீரைக் குடித்து தமிழீழம் கிடைத்த பின்பு இந்த ஆற்றைப் பாதுகாப்பதும் கப்பூது கிராமத்தை மையமாகக் கொண்டு அனைத்து வசதிகளுடனும் பெரு நகரமாக மாற்ற வேண்டும் என்பதையும் ஆற்றையும் பயணத்துக்கு பயன்படுத்த வேண்டுமென்ற தனது கனவையும் சொல்லிக் கொண்டே வருவார்.

                காலம் இப்படியே ஓட 1983 யூலை மாதம் திருநெல்வேலியில் எமது இயக்கத்தின் மிகப் பெரிய இராணுவத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து சிங்கள இனவெறியின் கோரத்தாண்டவம் தலைவிரித்தாடியது. திருப்பித்தாக்க வேண்டுமென்ற உணர்வே வயது வேறுபாடின்றி எல்லோரிடமும் மேலோங்கி இருந்தது. மிகவும் இரகசியமாகவே செயற்பட்ட எமது இயக்கத்தில் சேர வேண்டுமென்று ஓடித் திரிந்தார்கள். எமது விடுதலை இயக்கம் என்று நம்பி மாற்று இயக்கங்களில் சேர்ந்தவர்களும் ஏராளம். ஒருநாள் அவசரமாக என்னை சந்தித்து இந்தியாவுக்கு புறப்படுவதற்குத் தயாராகுமாறு கூறினார். நான் அறிமுகப்படுத்திய பலர் பண்டிதருடன் யாழ். பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள வீட்டில் காத்திருந்தார்கள். அன்றிரவே நாம் அனைவரும் இந்தியாவுக்குப் புறப்பட்டோம். புறப்படுவதற்கு முன்னர் பண்டிதர் பயிற்சி முடிந்ததும் நீ உடன் தாயகம் திரும்ப வேண்டுமென அன்புக் கட்டளையிட்டு வழி அனுப்பி வைத்தார். கார்த்திகை மாதம் இமயமலைச் சாரலிலுள்ள இந்திய இராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சி முடித்து பங்குனி மாதம் றஞ்சன் லாலா, புலேந்திரன், சந்தோசம் மாஸ்ரர், பார்த்தீபன் என மேலும் பலர் தாயகம் திரும்பினோம். இருநாளிலே பண்டிதரைச் சந்தித் தேன்.

                அந்நாட்களில் தமிழீழத்துக்கு பிரதித் தலைவராக பண்டிதர் தான் நியமிக்கப்பட்டிருந்தார். இராணுவத்தின் தேடுதல்களும் சுற்றிவளைப்புக்களும் நாளாந்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். பண்டிதரும் கிட்டரும் என்னை வடமராட்சி வல்வெட்டித்துறைக்கே போகுமாறுகூறிய போது முதலில் மறுத்தாலும் பின்னர் ஏற்றுக் கொண்டேன். நான் வடமராட்சி சென்று எனது போராட்ட வாழ்க்கையை பொலிகண்டியில் பதினொரு உறுப்பினர்களோடே ஆரம்பித்தேன். எமக்கு மூத்த உறுப்பினர் றஞ்சன் லாலா பொறுப்பாளராகவும் மேஜர் கணேஸ் இரண்டாம் நிலைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டார்கள். அந்நாட்களில் பண்டிதர் எம்மிடம் அடிக்கடி வந்து தங்கி விட்டுச் செல்வார். ஆஸ்துமா நோயாளியான பண்டிதருடைய மருந்துப் பொருட்களும் இன்ன பிறவும் என்னிடம் தரப்பட்டிருந்தது. அத்தோடு பண்டிதர் வரும்போதெல்லாம் அவருக்கான அனைத்தையும் செய்து கொடுக்கின்ற பணியும் என்னிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. தமிழீழத்தில் செய்யப்படுகின்ற அனைத்து வேலைகளுக்கும் பண்டிதர் பொறுப்பானதால் அனைத்தையும் எழுத்து வடிவிலேயே வைத்திருந்தார். எல்லாவற்றிக்கும் கணக்கு வைத்திருந்தார். யார் எந்த மாவட்டத்தில் செயற்பட வேண்டும் எந்தப் பொறுப்புக்களை யாரிடத்தில் கொடுக்க வேண்டுமென்பதில் மிகவும் நிதானமாகவே முடிவெடுப்பார். எனக்கு முதலில் கொடுக்கப்பட்ட வேலைத்திட்டம் எம்மிடம் வந்து போகின்ற அனைத்து இராணுவப் பொருட்களையும் எமது இரகசிய உதவியாளர்கள் மூலம் களஞ்சியப்படுத்திப் பாதுகாப்பதே.

              பண்டிதரே நிதிக் கையாள்கைகளையும் மேற்கொண்டதால் ஒவ்வொரு மாவட்டப் பொறுப்பாளர்களும் அவரிடம் வந்து கணக்குக் காட்டியே மேலதிக நிதிகளைப் பெற்றுச் செல்வார்கள். அந்த விடயத்தில் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். மூத்த தளபதிகள் உட்பட பலர் வெளியே காத்து நின்று கணக்குக் காட்டிச் சென்றதும் இப்போதும் போல் நினைவில் உள்ளது. பாரபட்சமில்லாத அவரது நிர்வாகத் திறமை கண்டு நான் பல வேளைகளில் வியந்ததுண்டு. குறுகிய காலத்திலேயே இயக்கம் விரிவாக்கம் கண்டிருந்தது. அரசியல் வேலைத் திட்டமும் எல்லா ஊர்களிலும் விரிவாக்கம் பெற்றிருந்தது. இராணுவத் தாக்குதல்கள் சிறிது சிறிதாக முன்னேற்றமடைய ஆரம்பித்தன.

எமது மக்களுடைய பூரண ஆதரவும் அரவணைப்பும் எமது வளர்ச்சிக்கு மெருகூட்டின. எமது மக்களே எம்மைப் பாதுகாக்கின்ற பொறுப்பை எடுத்து விட்டிருந்தார்கள் என்றே கூற வேண்டும். எமது உறுப்பினர்களில் அக்காவும் தம்பியுமாக இருவர் நீர்கொழும்பிலிருந்து வந்து இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் பண்டிதர் கொழும்பு சென்று வந்த காலமும் உண்டு. அவர்களில் தம்பிக்கு என்னைப் போன்ற வேலைத்திட்டமும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்தனை நம்பிக்கையானவர். 1984 மார்கழி மாதம் கடைசியில் வேலைத்திட்டமாக கொழும்புக்கும் பின்னர் நீர் கொழும்பில் அவர்களது வீட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள். தற்செயலாக அவர்கள் இருவரும் அயலவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு இராணுவத்தினரால் குடும்பமாகவே கைது செய்யப்பட்டார்கள்.

இராணுவத்தின் சித்திரவதைகளால் பண்டிதருடைய அச்சுவேலி முகாமும் புத்தூரில் எமது ஆயுத களஞ்சியக் கிடங்கும் காட்டிக் கொடுக்கப்பட்டது. பண்டிதருடைய அச்சுவேலி முகாம் 1985 தை மாதம் 9ஆம் திகதி அதிகாலை முற்றுகையிடப்பட்டது. தன்னுடனிருந்த போராளிகளைப் பாதுகாப்பதற்காக இராணுவத்துடன் சமரிட்டே பண்டிதர் உட்பட ஆறுபேர் வீரச்சாடைந்தார்கள். அதில் எமது மூத்த உறுப்பினர் புலேந்திரன் உட்பட பத்துப் பேரளவில் தப்பித்திருந்தார்கள். இலங்கை அரசுக்கு பெரிய வெற்றியாக பண்டிதருடைய உடலை தொலைக் காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டே இருந்தார்கள். கைப்பற்றிய ஆயுதங்கள் இலங்கை இராணுவத்திடமே அப்போது இருக்கவில்லை.

Capture 5 கப்டன் பண்டிதர் எமது விடுதலை அமைப்பின் மூத்த உறுப்பினரும் அவரது ஆழுமையும் வழிகாட்டலும் - கௌரிசங்கர்

பண்டிதருடைய முகாம் முற்றுகையின் முதல் நாள் கூட அச்சுவேலி சென்றிருந்தேன். அந்தக் காலங்களில் எமக்கு தொலைத் தொடர்பு வசதிகள் இருக்கவில்லை. நாம் பயணம் செய்து தான் எதனையும் செயற்படுத்தியிருந்த காலம். பண்டிதர் வீரச்சாவடைவதற்கு ஒருவாரம் முன்புதான் எமக்கு குறுந்தூர, நெடுந்தூர தொலைத் தொடர்பு சாதனங்கள் கிடைத்திருந்தன. எமது பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே இராணுவத்தால் அவை கைப்பற்றப்பட்டிருந்தன. அச்சுவேலி முகாம் முற்றுகையை உடைப்பதற்கு நாம் தயாரான போதும் எல்லாமே பிந்திப் போயிருந்தன. எமது தேசியத் தலைவர் தனது வலது கையை இழந்து விட்டேனெனக் கூறியி ருந்தார்.

இந்தச் சம்பவம் எமது போராட்டதுக்கு பாரிய பின்னடைவை அப்போது தந்திருந்தாலும் சயனைட்டின் தேவை உட்பட்டபல விடயங்களின் தேவையை உணர்த்திய கனதியான நிகழ்வாகவும் எமது விடுதலை அமைப்பால் அந்தக் காலத்தில் நோக்கப்பட்டது. பண்டிதரின் இழப்பின் தாக்கம் முள்ளிவாய்க்கால் வரை உணரப்பட்டதாகவே நான் கருதுகிறேன். பண்டிதருடைய இழப்பு இன்று வரை என்னுள்ளே பெரிய தாக்கமாகவே உள்ளது. பண்டிதர் போல அரசியல் அறிவு, உயர்ந்த நிதானமான சிந்தனை, நீண்டகாலத்திட்டம், எல்லோருடனும் அன்பாக சமமாகப் பழகுகின்ற தன்மை, எளிமை, ஆவணப்படுத்தும் பொறுப்பு இவையனைத்தும் கொண்டவர்கள் மிகமிக அரிதாகவே தேசியத் தலைவரோடு பயணப் பட்டிருக்கின்றார்கள்.

இன்றும் பலர் தாம் பண்டி தரை ஒருமுறை கண்டோம் கதைத்தோமென்று கூறுகின்ற போது அவரோடு விடுதலைப் பயணத்தில் கனதியாக இணைந்திருந்தது பெருமையாக இருந்தாலும் என் மனம் இப்போதும் அவரை எண்ணி அழுகின்றது. எனது விடுதலைப் பயணம் நிர்ப்பந்த காரணங்களால் தொடர்ந்து செயற்பட முடியாத நிலையை ஏற்படுத்தியிருந்தது. பண்டிதர் எம்முடன் இருந்திருந்தால் அவரைப் பற்றிய நினைவை பகிர்ந்து கொள்கின்ற வாய்ப்பு கடைசிவரையும் கிடைத்தே இருக்காது. நான் எமது பண்டிதரை தமிழ் மக்களின் சேகுவேராவாகவே பார்க்கின்றேன். நாம் பெற்றெடுக்கும் தமிழீழத்தில் பண்டிதர் உட்பட்ட அனைத்து மூத்த உறுப்பினர்களும் மாவீரர்களும் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்படுவார்கள், பூசிக்கப்படுவார்கள்.