Tamil News
Home உலகச் செய்திகள் ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவர் இருக்குமிடத்தை கண்காணித்து வருகிறோம் – ட்ரம்ப்

ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவர் இருக்குமிடத்தை கண்காணித்து வருகிறோம் – ட்ரம்ப்

ஐ.எஸ். அமைப்பின் புதிய தலைவர் மீதும், அவர் இருக்குமிடத்தையும் கண்காணித்து வருவதாக அதிபர் ட்ரம்ப்  தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி(48) கடந்த 26ஆம் திகதி கொல்லப்பட்டார்.

சிரியாவில் இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் ஒரு வளாகத்தில் பதுங்கியிருப்பதை துப்பறிந்து அமெரிக்க சிறப்புப் படை அந்த இடத்தை சுற்றி வளைத்தது. தப்பிக்க ஒரு வழியும் இல்லை என்ற நிலையில் தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்து பாக்தாதி பலியானார்.

இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதையடுத்து அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷி ஐ.எஸ். அமைப்பின் புதிய தலைவனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்தது. மேலும் பாக்தாதி கொல்லப்பட்டதற்கு தகுந்த பதிலடி அளிப்பதாகவும் ஐ.எஸ். அமைப்பு அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்கும் இடத்தை கண்காணித்து வருவதாகவும், அவர் எங்கு இருக்கிறார் என நாங்கள் அறிவோம் எனவும் ட்ரம்ப் தெரிவித்தார். நியூயோர்க் பொருளாதார சங்கத்தில் பேசிய ட்ரம்ப், ஐ.எஸ். அமைப்பின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவரையும் கொன்று விட்டோம். மூன்றாவதாக ஒரு தலைவர் உருவாகி உள்ளார். அவரையும் அமெரிக்கா கண்காணித்து வருகின்றது. அவருக்கு மிகப் பெரிய சிக்கல்கள் காத்திருக்கின்றன. ஏனென்றால் அவர் இருக்கும் இடம் எங்களுக்குத் தெரியும்” என கூறினார்.

ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் இன்னும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அதிகமாக பரவியுள்ளனர். அவர்கள் மீது தாக்குதல் தொடரும் என்றும் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version