ஐக்கிய தேசியக் கட்சியுடன் மட்டுமன்றி அனைத்து எதிா்க்கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவோம் – சஜித் பிரேமதாஸ அறிவிப்பு

 ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து, வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான கூட்டு அணுகுமுறையை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு ஒப்புதல்  அளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளாா்.

மின்சாரக் கட்டணங்களைக் குறைத்தல், எரிபொருள் விலைகளைக் குறைத்தல் மற்றும் உர மானியங்களை வழங்குதல் போன்ற தேசிய மக்கள் சக்தி வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டினாா்.

செயற்குழுக் கூட்டத்தையடுத்து ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்திற்கு வெளியே பேசிய பிரேமதாஸ, “அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கும் செயல்களுக்கும் இடையிலான இடைவெளி, பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய அதன் இயலாமையை எடுத்துக்காட்டுகிறது” என்றும் கூறினார்.

”மக்களின் ஆணையைக் கொண்ட அரசாங்கம், அதன் உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும்” என்று பிரேமதாச வலியுறுத்தினார்.

“இல்லையெனில், எதிர்க்கட்சி ஒரு ஜனநாயக கட்டமைப்பிற்குள் பொது மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும்” என்றும் சஜித் பிரேமதாஸ உறுதியளித்தார்.

செயற்குழுக் கூட்டத்தின் போது, ​​அரசாங்கம் பொதுமக்களை அடக்குவதாக பிரேமதாச விவரித்தாா். அரசாங்கத்தை எதிர்ப்பதற்கான உத்திகள் குறித்தும் கட்சி உறுப்பினர்கள் விவாதித்தனர். மேலும் தேர்தலுக்குத் தயாராக வேண்டியதன் அவசியத்தையும் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினர்.

தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதையும், பொதுமக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய மற்ற எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைக்கும் நோக்கத்தையும் பிரேமதாச மீண்டும் இதன்போது உறுதிப்படுத்தினார்.