எழுவர் விடுதலை: தமிழக முதல்வருடன் சீமான், பாரதிராஜா சந்திப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்   சீமான், திரைப்படத் தயாரிப்பாளர் பாரதிராஜா  உள்ளிட்டோர் சந்தித்து எழுவர் விடுதலை  குறித்து  வலியுறுத்தியதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து சீமான்  செய்தியாளர்களுக்கு  கருத்து தெரிவிக்கையில்,

”முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினோம். ஏழு பேர் விடுதலை குறித்துப் பேசினோம். அப்போது  எழுவர் விடுதலை  விவகாரத்தில் அரசு உறுதியாக உள்ளதாக  முதல்வர் தெரிவித்தார். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வருகிறது. அதில் வரும் போக்கை வைத்து நகர்வோம் என்று  முதல்வர் சொன்னார். விடாமல் தொடர்ச்சியாகப் போராடுவோம் என்று என்னிடம் சொன்னார்” என்றார்.

 மேலும்  செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த சீமான்,

கூட்டணியில் உள்ள காங்கிரஸே எதிர்க்கிறதே?

அதை விடுங்கள்.

மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்ய முடியாதா?

அதையும் பேசியிருக்கிறோம். அதை விட்டுவிட மாட்டோம், தொடர்ச்சியாகக் கண்காணித்துச் செய்வோம் என  முதல்வர் உறுதி அளித்துள்ளார். ஆகவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எப்படி வருகிறது என்று பார்ப்போம், அதன் பின்னர் முடிவெடுப்போம் என்று முதல்வர் கூறியுள்ளார்.

திமுகவின் 30 நாட்கள் ஆட்சி எப்படி உள்ளது?

சரியாக இருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் வேகமாக இயங்குகிறார்கள், மருத்துவத் துறையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சிறப்பாக இயங்குகிறார்கள். அழைத்துப் பாராட்டுகிறோம். கொரோனா தொற்றில் அதைக் கட்டுப்படுத்துவதே பெரும்பாடாக உள்ளது.

ஏழு பேர் விடுதலையில் முதல்வர் உறுதியளித்தாரா?

ஏழு பேர் விடுதலையில் நான் மிக உறுதியாக இருக்கிறேன் என்று முதல்வர் கூறினார்.

 நன்றி – இந்து தமிழ் திசை