Tamil News
Home செய்திகள் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது குறித்து ப.சத்தியலிங்கம் எம்.பி கருத்து

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது குறித்து ப.சத்தியலிங்கம் எம்.பி கருத்து

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்கும் போது தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் என தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்திய பின் வெள்ளிக்கிழமை (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை தவிர்ந்த அனைத்து சபைகளிலும் வவுனியாவில் தமிழரசுக் கட்சி போட்டியிடுகிறது. எல்லா சபைகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்புகிறோம். எமது மாவட்டம் ஒரு எல்லைப்புற மாவட்டம். எமது மாவட்ட ஆட்சி அதிகாரம், எமது பூர்வீகம் இந்த மண்ணின் கட்சிகளுக்கு கிடைக்க வேண்டும். அந்த அடிப்படையல் இந்த மாவட்டத்தில் போட்டியிடுகின்றோம். இந்த மக்களின் தேவைகள் பூர்த்தி செய்து அபிவிருத்தி நோக்கி நகர்வோம். அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளோம்.

எல்லா சபைகளிலும் தமிழ் தேசிய கட்சிகளுடன்  சேர்ந்து பயணிக்க வாய்ப்புள்ளது. எமது மத்திய குழுவில் ஒரு சின்னத்தின் கீழ் சேர்ந்து பயணிப்பது முடியாத சந்தர்ப்பத்தில் ஆட்சி அமைக்கும் போது தமிழ் தேசியக் கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. இந்த தேர்தல் முறையில் தனிக் கட்சி ஆட்சி அமைக்க முடியாது.

சேர்ந்து பயணிக்கும் நிலைப்பாட்டில் இருந்து தமிழரசுக் கட்சி விலகவில்லை. வவுனியா வடக்கில் சேர்ந்து போட்டியிடுவது தொடர்பில் பேசினோம். சில காரணங்களால் அது சரிவரவில்லை. ஆனால் நிச்சயமாக சேர்ந்து ஆட்சி அமைப்போம் எனத் தெரிவித்தார்.

Exit mobile version