கடந்த 7 நாட்களில் மட்டும் 33 இலட்சம் பேர் கொரோனா தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு வருகின்றது.
உலக அளவில் இதுவரை 12 கோடியே 49 இலட்சத்து 65 ஆயிரத்து 722 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 27 இலட்சத்து 49 ஆயிரத்து 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் அமெரிக்காவில் மட்டும் 3 கோடியே 63 இலட்சத்து 6 ஆயிரத்து 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5.56 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “உலக அளவில் கடந்த 6 வாரங்களாக கரோனா மூலம் குறைந்து வந்த உயிரிழப்பு நின்றுவிட்டது. அதேசமயம், கடந்த ஒரு வாரமாகப் புதிதாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதாவது 21-ம் தேதி வரையில் உலக அளவில் 33 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில், அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில்தான் கடந்த ஒரு வாரத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் புதிதாகப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஏற்கெனவே இருந்த கொரோனா வைரஸ் தவிர்த்து, உலகில் புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் பி.1.1.7 வகை கரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் பி.1.351 வகை வைரஸ்கள், பிரேசிலில் பி.1. வகை வைரஸ்கள் அதிகரித்து, பரவல் வேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளன” எனத் தெரிவித்துள்ளது.