Tamil News
Home செய்திகள் உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் : த.தே.கூ

உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் : த.தே.கூ

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராச்சிப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு சபையில் வலியுறுத்தியுள்ளது.

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளால் அங்குள்ள மக்கள் மிகவும் கோபாவேசமடைந்துள்ளனர் எனவும் கடந்த 22 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும்  இவ்விடயத்தில்  பொறுப்பான அமைச்சர் உடனடி கவனம் செலுத்த வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ,கலையரசன், சாணக்கியன் ஆகியோர் இந்த தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை கடுமையாக எதிர்த்ததுடன் உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெறும் தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகளில் தொல்லியல் துறையினரை விடவும் இராணுவத்தினரே அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியதுடன் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் தொடர்பான வரலாற்றையும் விரிவாக சபையில் முன் வைத்தனர்.

தொல்லியல் திணைக்களத்தினரின் பணியில் ஏன் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்? நாம் சமாதானத்தை விரும்புகின்றோம். அதேபோன்றே எமது ஆலயங்களும் சமாதானத்தையே வலியுறுத்துகின்றது. ஆனால் அரசும் தொல்லியல் திணைக்களத்தினரும் எம் மீதும் எமது ஆலயங்கள் மீதும் அராஜகத்தையே புரிகின்றனர் .இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றனர்.

அதேபோன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சபையில் உரையாற்றுகையில்,

“3500 ஆண்டுகள் பழைமையான உருத்திரபுரம் சிவன் கோவிலில் அகழ்வாராய்ச்சி செய்து சிங்களவர் பகுதியாக்க முற்படுகின்றனர். இது வடபகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வடக்கிலுள்ள இது தொடர்பிலான அதிகாரிகளுடன் எந்த வித கலந்துரையாடல்களையும் செய்யாது பிக்குகளின்,இராணுவத்தினரின் தலையீடுகளுடன் தமிழர்களின் வரலாறுகளை திரிபுபடுத்தும் முயற்சிகளே முன்னெடுக்கப்படுகினறன. இதன் கருவியாக தொல்லியல் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.

“இவ்வாறான நடவடிக்கைகளினால் இதுவரை நாம் எத்தனை உயிர்களை இழந்துள்ளோம் என்பதனை ஒவ்வொருவரும் புரிந்து இன்னொரு மதத்தினர் ஆக்கிரமிக்கும் போதுதான் இது போன்ற பிரச்சினைகள் எழுகின்றன. இன்னொரு யுத்தத்தை உருவாக்க அரசு இடமளிக்க வேண்டாம்.

புரிந்துணர்வு இல்லாததே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு காரணம். மக்கள் பிரதிநிதிகள் இது போன்ற பிரச்சினைகளை முன்வைக்கும்போது விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பொறுப்பான பதிலை வழங்க வேண்டும். இந்தப் பிரச்சினை பூதாகரமாக இடமளிக்க வேண்டாம்” என ஐக்கிய மக்கள் சக்தி  நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த ஒத்திவைப்பு வேலை விவாதத்தில் உரையாற்றிய அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்  சுரேன் ராகவனும் தொல்லியல் என்பது மக்களின் உணர்வுகளுடன் தொடர்புபட்டதென்பதனால் இவ்விடயங்களை மிகவும் கவனமாகக் கையாள வேண்டுமெனவும் இல்லாதுவிடின் மக்கள் கிளர்ச்சிகளுக்கு வழி வகுத்து விடுமெனவும் கூறினார்.

Exit mobile version