எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையில் உயிர் நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியத்திற்காக பயணிப்போர் உள்ளிட்ட அனைவரும் முன் வர வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று (10) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இதில் கருத்துரைத்த மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், தமது கைகளினால் வழங்கிய உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது மிகவும் அவசியமான விடயமாகும் என்று கூறியுள்ளார்.
இந்த ஜனாதிபதி வரலாறு தெரியாத எங்கள் இளம் சமூகத்திடம் தன்னை நல்லவராக காட்டும் செயற்பாட்டினையே முன்னெடுத்து வருகின்றார். அவர் வெளித்தோற்றத்தில் தன்னை நல்லவராக காட்டிக்கொண்டு சிங்கள அரசியலுக்குள் முழுமையாக சிக்கியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.
16 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எங்களுக்கு நடந்த இன அழிப்புக்கான எந்த நீதியும் கிடைக்கவில்லை. இலங்கை அரசின் இன அழிப்பு நாள் மே 18 அதை எம்மால் ஒரு போதும் மறந்து விட முடியாது. அதனை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை இன அழிப்பு வாரத்தை முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பினையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு இனமே அழிக்கப்பட்ட நாள் மே 18. அதனை யாராலும் மறுக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது.
இந்த இனஅழிப்பானது சர்வதேசத்தின் உதவியுடன் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டது. 16 வருடங்கள் கடந்தும் சர்வதேசமும் எம்மை மறந்திருப்பதை நீனைத்து நாம் வேதனையடைகின்றோம் என்று மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.