உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் தொடர்பில் திருப்தியடைவதாக பேராயர் இல்லம் தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற விசாரணைகள் தொடர்பில் திருப்தியடைவதாக கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைய விசாரணைகள் சற்று துரிதப்படுத்த வேண்டும் என்பது தமது நிலைப்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னதாக, மறைக்கப்பட்ட முக்கிய சில விடயங்களை வெளிபடுத்துவதாக ஜனாதிபதி கூறியிருந்தார். எனவே, ஜனாதிபதி கூறிய விடயம் தொடர்பில் நம்பிக்கை கொண்டுள்ள கத்தோலிக்க சமூகம், அதனை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ கோரியுள்ளார்.
பிள்ளையான் யுத்தத்தை நிறைவுசெய்வதற்கு உதவியதாகவும் அதனால் அவர் தேசிய வீரராக போற்றப்பட வேண்டும் எனவும் உதய கம்மன்பில கூறியமையானது மிகவும் கவலையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.