உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமென எஃப்.பி.ஐ. அறிக்கை

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. அறிக்கை ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த அறிக்கையில், 2019 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கு முக்கிய சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. மூலம், கலிஃபோர்னியாவின் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முக்கியமான அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில், தேவாலயங்களையும் ஹோட்டல்களையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 268 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில் நுட்பமான நீதிமன்ற சாட்சியங்கள், சமூக ஊடக பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு குறித்த அறிக்கையை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. தயாரித்துள்ளது.

இலங்கையில் இயங்கிய உள்ளூர் ஐ.எஸ். அமைப்பை சஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய விதமும், அந்த தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் திட்டத்தை எப்படி திட்டமிட்டார் என்பதும் அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.