உயிரிழந்த தேரரின் உடல் செம்மலை நீராவியடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது ;முறுகல் ஏற்படலாம் என்பதால் காவல்துறை குவிப்பு

கொழும்பு மேதாலங்கார  கீர்த்தி தேரர், புற்றுநோய் காரணமாக நேற்று (21) மகரகம வைத்தியசாலையில்  உயிரிழந்த நிலையில், அவரின் சடலம் முல்லைத்தீவு செம்மலைப்பகுதிக்கு இன்று (22) கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளதால்  பௌத்த தேரரின் சடலத்தை கொண்டுவரவேண்டாம் என்றும் அங்கு பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் ஆலய நிர்வாகத்தினர்  முல்லைத்தீவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன், தேரரின் சடலத்தை விகாரைக்கு கொண்டுவந்து இறுதிக்கிரியை மேற்கொள்ளும் முயற்சிக்கு தடைவிதிக்குமாறு கோரிக்கை விடுத்து, பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று (21) மாலை முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து, பதில் நீதவானிடம் பொலிஸார் தடைகோரி விண்ணம் செய்த நிலையில் ஆலய வளவில் சடலத்தை எரியூட்டுவதற்கு மாத்திரம் பதில் நீதவானால் தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், விகாரை வளாகத்துக்குள் இன்று (22) அதிகாலை 2 மணியளவில் பிக்குவின் சடலம் கொண்டுவரப்பட்டுள்ளது

இதனையடுத்த, அங்கு முறுகல் நிலை ஏற்படலாம் என்பதால், அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேரரின் சடலத்தை எரிப்பதற்காக வேற்று இடமொன்றை தெரிவுசெய்யும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்.

நாளை (23) தேரரின் சடலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏதோ ஒருபகுதியில் எரியூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.