உண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்

வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் 15-வது நாளாக  முருகன் உண்ணாவிரதத்தை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன்,  வேலுர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்,  சிறை விதிகளை மீறி  வீடியோ அழைப்பில் பேசினார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் பொலிஸார்.

மேலும், முருகன் தனது மனைவி நளினி மற்றும் உறவினர்களிடம் வாட்ஸ்-அப் வீடியோ அழைப்புகள் மூலம் பேச தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து  முருகன் 15-வது நாளாக  உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது உடல் நிலையை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வரும் நிலையில், முருகனுக்கு நேற்று முன்தினம் இரண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.

மேலும், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு  சிறை நிர்வாகம் தரப்பில் இருந்து தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், இரத்து செய்யப்பட்ட சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் எனக் கோரி முருகன் தொடர்ந்து  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.