Tamil News
Home செய்திகள் ‘உடைப்பதற்கும் மீளக் கட்டுவதற்கும் இது வெறும் கல்லும் மண்ணுமல்ல, இது’-கே.வி.தவராசா

‘உடைப்பதற்கும் மீளக் கட்டுவதற்கும் இது வெறும் கல்லும் மண்ணுமல்ல, இது’-கே.வி.தவராசா

‘உடைப்பதற்கும் மீளக் கட்டுவதற்கும் இது வெறும் கல்லும் மண்ணுமல்ல, இது தமிழர்களின் உணர்வு என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும்.’ என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர்,

“தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னர் அந்தப்பிரச்சினையைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. ஆத்மார்த்தமாக தமிழரின் பிரச்சினையைப் புரிந்து விளங்கிக்கொள்ளாத யாரிடமிருந்தும் தமிழருக்கான திருப்திகரமான தீர்வு கிடைக்காது இந்தத் தத்துவத்தை நடைமுறையில் பல்வேறு எடுகோள்களையும் உதாரணங்களையும் கண்முன்னால் நிகழ்கின்ற நிகழ்வுகளின் அடிநாதத்திலிருந்தும் எடுத்துக்காட்ட முடியும்.

தமிழரின் ஆயுதப் போர் முடிந்து விட்டது. அது இலங்கை இராணுவத்தால் வெற்றிகொள்ளப்பட்டுவிட்டது. இதில் நாம் மறுப்பதற்கு ஒன்றுமே இல்லை. வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு பிரதேசத்திலும் வெற்றிச் சின்னங்கள் அமைக்கப்பட்டன. மட்டக்களப்பில் இழுப்பட்டிச்சேனை தொடக்கம் பாராளுமன்ற வளாகம் வரை யுத்த வெற்றியின் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டன.

அவை குற்றங்காணப்படவில்லை. வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன அவை சரிகாணப்பட்டன. அதே நாள் தமிழ் மக்கள் அதே யுத்தத்தில் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்காகக் கண்ணீர்வடிக்கின்றனர் துன்பம் அனுபவிக்கின்றனர். இழப்பை நினைவுறுத்தி கொல்லப்பட்ட அனைவருக்காகவும் நினைவேந்துகின்றனர்.

ஆனால் இது சரிகாணப்படவில்லை. அப்படி நினைவேந்து தவறாகப் பார்க்கப்பட்டு தடைசெய்யப்பட்டவிடயமாகின்றது இந்த இடத்திலிருந்து தோன்றுகின்ற முரண்பாட்டுக்கு ஓரே நாடு ஒரே மக்கள் கோட்பாடு எப்படி பதில் சொல்லப் போகின்றதென்பது தெரியாது.

ஒரே நாட்டில் தமது உரிமைகளை உறுதிப்படுத்த இறுதித் தேர்வாக ஆயுதப் போரைத் தேர்வு செய்து போராடிய மக்கள் குழுமத்தைத் தோற்கடித்துவிட்டு வெற்றிச் சின்னத்தை நிறுவி அதைக் கொண்டாடும் மனநிலையில் இருக்கின்ற மக்களின் எண்ணப்பாட்டில் மாற்றம் வராத வரைக்கும் தமிழரின் பிரச்சினையின் அடிநாதத்தை இவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களது பார்வையில் பார்த்தால் கொல்லப்பட்டது தம் சொந்த மக்கள் என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத மனநிலையின் வெளிப்பாடுதான் என்பதை மிக இலகுவாக அடையாளப்படுத்த முடிகின்றது.

இந்தப் புரிதலின் பின்னணியில் இருந்துதான் யாழ் பல்கலைக்கழகத்தில் அமையப்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தகர்க்கப்பட்டிருக்கின்ற சம்பவத்தைப் பார்க்கவேண்டியிருக்கின்றது.

இதையொட்டி பல்வேறு வாதப்பிரதிவாதங்களையும் கருத்தாடல்ளையும் ஊடகப் பரப்பில் ஏராளம் காணக்கிடைக்கின்றது. யார் பொறுப்பேற்பது யார் பதிலளிப்பது என்பதெல்லாம் தாண்டி சில ஒழுங்குகளை இங்கு எம்மால் தெளிவாக அடையாளம் காணமுடிகின்றது.

பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் பணிப்பின் பேரில் உடைக்கப்பட்டதாக உபவேந்தர் சொல்கின்றார். நினைவுத் தூபியை உடைத்தல் என்பது பல்கலைக்கழக நிருவாகத்தின் முடிவே தவிர அது தமது ஆணையல்ல என்கிறார் ஆணைக்குழுவின் தலைவர்.

மீள அமைப்பதற்கு இசைவுடன் செயற்படத் தயார் என்று மீளவும் உபவேந்தர் கூற பலகலைக்கழகத்தில் வேறுபாடுகளைப் புகட்டும் யுத்த சின்னஙகள் தவிர்;க்கப்டல் வேண்டும் என்றார் ஆணைகுழுவின் தலைவர்.

பல்கலைக்கழக வளாகத்தில் எது இருக்க வேண்டும் எது இருக்கக் கூடாது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் உபவேந்தருக்குண்டு என்றார் ஊடக அமைச்சர்.
மாணவர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தி சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தவே பொலிசார் அழைக்கப்பட்டதாக சட்டஒழுங்கு அமைச்சர் சொல்கின்றார்.

பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க விஸேட அதிரடிப்படையே அழைக்கப்பட்டது உடைப்புக்கும் இராணுவத்துக்கும் சம்பந்தமில்லை என்கிறார் இராணுவத் தளபதி.
இது எல்லாவற்றுக்கும் மேலாக தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என்று சில மாணவர்கள் உறுதியுடன் களத்தில் இறங்கி இருக்கின்றார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பிரச்சினையைப் பார்க்கவேண்டிய மற்றுமொரு பக்கம் இருக்கின்றது.

அதுதான் ‘உடைப்பதற்கும் மீளக் கட்டுவதற்கும் இது வெறும் கல்லும் மண்ணுமல்ல, இது தமிழர்களின் உணர்வு என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும்.’ என்றார்.

Exit mobile version