Tamil News
Home செய்திகள் ஈழத் தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு உருவாக்கப்படுவது அவசியம்-வீரமணி

ஈழத் தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு உருவாக்கப்படுவது அவசியம்-வீரமணி

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் இலங்கையின் ஜனாதிபதி பதவியில் அமர்ந்து விட்டார். இதை இந்திய மத்திய அரசின் வெளியுறவுத்துறை கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். ஈழத் தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு ஒன்றை கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழ்நாட்டில் உருவாக்கப்படுவது அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரின் அறிக்கை பின்வருமாறு,

இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் தம்பியான கோத்தபயா ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா தோல்வியடைந்துள்ளார்.

வெற்றி பெற்ற கோத்தபயா ராஜபக்ஸ முன்னர் மகிந்த ராஜபக்ஸ ஆட்சியிலிருந்த போது, இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவரே. இந்த தமிழர் இன ஒடுக்கல், இன அழிப்பு வேலையை வரலாறு ஒருபோதும் மறைத்துவிட முடியாது.

அவரது அண்ணன் முன்னாள் அதிபர் ராஜபக்ஸவை மிஞ்சும் அளவிற்கு இந்தப் புதிய அதிபர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது ஈடுபட்ட மனித உரிமை மீறல்கள், பறிப்புகள் உட்பட உலக மக்களின் கண்டனத்திற்கு ஆளானவையே.

ஐ.நா. விசாரணைக் குழு என்பதும் ஒன்றுமில்லை. ஈரமான பட்டாசு கொளுத்துவத போலவே ஆகிவரும் நிலையில், அங்குள்ள தமிழினம் மீண்டும் ஒரு கடும் சோதனையை சந்திக்கும் அவலமான அபாயகரமான நிலைமை அமைந்துள்ளது வேதனையிலும், வேதனையாகும்.

“ஓநாய் ஒருபோதும் சைவமாகாது” என்பது எப்படியோ, அப்படித்தான் இப் புதிய தலைமையின் போக்கும் இருக்கக்கூடும்.

கோத்தபயா ராஜபக்ஸ இலங்கையின் அநுராதபுரத்தில் உள்ள ஜயசிறி மகாபோதி பௌத்த விகாரை அரங்கில் பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவர் நாட்டு மக்களுக்கு நீண்ட உரையாற்றினார். அதில் முக்கியமாக நாட்டின் வளர்ச்சியே தற்போது நமக்கு மிகவும் முக்கியமானது. நாட்டில் தேவையில்லாத போராட்டங்கள் என்று கூறிக்கொண்டு போராடி வருகின்றனர். இவர்களால் நமது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையேற்படும் என்று பேசியுள்ளார்.

இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் போரின் போதும் அதற்கு முன்பும் காணாமல் போன தமது உறவுகளின் நிலை என்ன? அவர்கள் உயிருடன் உள்ளனரா அல்லது கொல்லப்பட்டார்களா என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு உலகெங்கிலும் இருந்து ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இது போன்ற போராட்டங்களை மனதில் வைத்து தனது உரையில் எச்சரிக்கை செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டள்ளது.

ஜனாதிபதியானவுடன் கோத்தபயா ராஜபக்ஸ மேற்கொண்ட முதலாவது நியமனம் இதுவாகும். மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, இறுதிப் போரின் போது, இராணுவத்தின் 53ஆவது படையணிக்குத் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இறுதிப் போரில் தமிழர்களைக் கொன்று குவித்த பாதுகாப்புத்துறை செயலாளர் இப்போது ஜனாதிபதி. இறுதிப் போரின் போது இராணுவத்தின் 53ஆவது படையணிக்குத் தலைமை வகித்தவர் இப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர். எப்படி இருக்கிறது? இதன் விளைவு என்னவாகும் என்ற அச்சம் நம்மை உலுக்குகிறது.

தொப்புள்கொடி உறவுள்ள நம் ஈழத் தமிழரின் வாழ்வுரிமைகளுக்கு கேள்விக்குறியாக மாறிடும் இருண்ட அரசியல் சூழல் வந்துள்ளது.

மத்தியில் உள்ள பா.ஜ.க அரசும், பிரதமர் மோடியும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைகளை நியாயமான வகையில் பாதுகாப்பதை அதன் முக்கிய கடமையாகக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் வெளியுறவுத் துறை மிகவும் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை எப்படி நடந்து கொள்ளும் என்பது துல்லியமாகக் கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சிறுபான்மையினராகிய ஈழத் தமிழ்ச் சொந்தங்களும் சரி, இஸ்லாமிய சிறுபான்மையினராக இருப்பவர்களும் சரி, அந்நாட்டு குடி மக்கள் என்கிற போது, அவர்களது உரிமைகள் மனிதநேய அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இந்திய அரசால், தமிழக அரசால் வலியுறுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடும், தமிழ்நாட்டுக் கட்சிகளும், அமைப்புகளும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு அமைப்பு ஒன்றினை புதிதாக ஒத்த கருத்துள்ளவர்களைக் கொண்டு, சட்டபுர்வமான முறைகளில் ஐ.நாவின் மனித உரிமைகள் காப்புரிமையின்படி காக்க உறுதி பூண்டு, ஈழத் தமிழர்கள் அநாதைகள் அல்ல, எந்த நிலையிலும் எங்கள் சொந்தங்கள் – தொப்புள் கொடி உறவுகள் என்பதை, இன அடிப்படைகளையும்கூட தாண்டி, மனித நேயத்தோடு பாதுகாக்க முன்வர வேண்டும். இது மிகவும் அவசியமாகும்.

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடக் கழகம்,

சென்னை

இவ்வாறு கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

 

Exit mobile version