ஈழ அகதிகள் முகாமில் 33 பேருக்கு கொரோனா

ஈழ அகதிகள் முகாமில் உள்ள, 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. கோவை காரமடை சிக்கதாசம்பாளையம் வேடர் காலனியில் உள்ள, இலங்கை அகதிகள் முகாமில், 1,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள, 530 பேருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகளில், ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று அகதிகள் முகாமில், உள்ள கர்ப்பிணி உட்பட, 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, 32 பேர் கண்ணார்பாளையம் கொரோனா சிகிச்சை மையத்தில், அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணி பொகலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அனுமதிக்கப்பட்டார். சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ’33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.