Tamil News
Home செய்திகள் இலங்கையை கடக்கவுள்ள புயல் – பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையை கடக்கவுள்ள புயல் – பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில்  உருவாகியுள்ள ஆழமான தாழமுக்கமானது ஒரு சூறாவளியாக மாறி பெரும்பாலும் இலங்கையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் மழை மற்றும் காற்று  அளவில் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில்  உருவான தாழமுக்கம் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து நேற்று இரவு 11.30 மணிக்கு திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இத் தொகுதியானது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்த சூறாவளி பெரும்பாலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும் பருத்தித்துறைக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை இன்று (புதன்கிழமை) மாலையில் அல்லது இரவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடையிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்சூடும் என்பதோடு, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் சூடும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version