இலங்கையில் வடக்கு பகுதியில் பலத்த காற்று, சூறாவளி

25.05.21 வடக்கில் கடும் காற்று வீசும் என வளிமண்டலவியல் நிலையம் அறிவித்துள்ளது. வடக்குப் பகுதியில் பலத்த காற்று வீசுவதுடன், பயன்தரு மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. 
அடுத்த சில மணி நேரங்களில் வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள ´யாஸ்´ என்ற சூறாவளி  கடும் புயலாக  தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டில் பலத்த காற்று வீச ஆரம்பித்திருப்பதாகவும் நாட்டின் தென் மேற்கு பகுதியில் மழை பெய்யும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசேடமாக மேற்கு, சப்ரகமுவ ,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் மழையுடனான காலநிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் காற்றின் வேகம் 50 தொடக்கம் 60 கிலோ மீட்டர் வரை அதிகரிப்பதுடன் விசேடமாக மத்திய மேற்கு மலை சாரல், வட மத்திய, வட மேற்கு மாகாணங்களிலும், கேகாலை, வவுனியா முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும்.
இதே போன்று, மேல் மாகாண கரையோரப் பகுதியிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காற்று 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது வீசும் காற்றினால் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் பயன்தரு மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.