இலங்கையில் ஏற்கனவே 453 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 4 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்று காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் இருவர் நேற்றும் (24), ஒருவர் நேற்று முன்தினமும் (23), கடந்த பெப்ரவரி 21 ஆம் திகதி ஒருவரும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 467 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில்,முதல் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒரு தடுப்பூசியின் மூலம் தொற்றுக்குள்ளாகாமல் தப்பிக்கலாம் என அதிக தன்னம்பிக்கை கொள்ளக்கூடாது என கொரோனா கட்டுப்பாட்டு தேசிய செயலணித் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 5 இலட்சம் கோவிட்19 தடுப்பூசிகள் சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக தடுப்பூசிகள் நாட்டுக்கு வந்து சேர்ந்ததும் அவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.