இலங்கையில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 15 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 14 பேர் கொரோனா தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் புத்தளம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் கொரோனா தொற்றுறதியானவர்களில் நேற்றைய தினம் வரையில் 61 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்தநிலையில் 165 பேர் தற்போது மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் கொவிட்-19 தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்றுறதியாகியுள்ளது.
பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அரியாலை தேவாலயத்தில் ஆராதனை நடத்திய போதகருடன் தொடர்பை பேணியவர்களுள் 8 பேருக்கு தொற்றுறதியாகியுள்ளது.
இதேநேரம் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தென்பகுதியை சேர்ந்தவர்களுள் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுறதியாகியுள்ளது.
முன்னதாக வடபகுதியில் 7 பேருக்கு கொரோனா தொற்றுறதியாகியிருந்தது.
இந்த நிலையில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்றுறதியாகியதை அடுத்து வடபகுதியில் நேற்று வரை 15 பேருக்கு கொரோனா தொற்றுறதியாகியுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் அடையாளம் காணப்பட்டமையடுத்து பேருவளை – பன்னில் மற்றும் சீனக் கொட்டுவ பகுதிகள் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் தாம் உள்ளிட்ட குழுவினர் குறித்த நபர்களை முன்னதாக அடையாளம் கண்டதையடுத்து நோய் தொற்று பரவுதலை கட்டுபடுத்த கூடியதாகவுள்ளதாக பேருவளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வருண செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் பேருவளை பகுதியில் மாத்திரம் கொரோனா தொற்றுறுதியான 35 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.