இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்ககோரி ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் நேற்று (3) கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழக மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

‘கடந்த 27 நாட்களில் 5 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 63 மீனவர்களும் 5 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன’ என்று அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘கடந்த 2024 ஆம் ஆண்டில் 36 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 530 மீனவர்கள் மற்றும் 71 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன’ என்றும் அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இலங்கை சிறையிலுள்ள 97 மீனவர்களும் கைப்பற்றப்பட்டுள்ள 216 மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதையும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

‘இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைதுசெய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து இது போன்று நடைபெற்று வருகின்றன’, ‘மீனவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதும்இ அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்காமல் இருப்பதும் கடலோரப் பகுதியில் வாழும் மீனவ சமுதாயத்தினருக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

‘இவ்வாறான தொடர் கைது நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும்’ தமிழக மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.