இலங்கையில் அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா பரவும் அபாயம்- வைத்தியர் சுடத்சமரவீர

இலங்கையில் தற்போது 13 மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ள தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி வைத்தியர் சுடத்சமரவீர, ஏனைய மாவட்டங்களுக்கும் பரவினால் அது ஆபத்தில் போய் முடியும் என்று எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குருநாகல், புத்தளம், கேகாலை, கண்டி, காலி, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், பொலனறுவை உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் விசேடமாக கம்பஹாவிலிருந்தும் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்“

பேலியகொட மீன் சந்தையில் மீன் விற்பவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மீன் விற்பவர்கள் ஊடாக கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளில் பரவும் ஆபத்துள்ளது.

பேலியகொட மீன் சந்தையிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் மீன்களை விற்பனை செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக தொற்றிற்குள்ளானவர்கள் இருக்கக்கூடும்” என்றார்.