மேலும், ஒரு தத்துவார்த்தக் கூற்றைச் சிறிது விரிவாகப் பார்க்கலாம். “காணப்படும் நிஜமான வாழ்க்கை நிலைமைகளில் இருந்து தத்துவப் பிரச்சினைகள் எழுகின்றன. அந்த நிஜமான எதார்த்தபூர்வ நிலைமைகளை மாற்றுவதன் மூலமே – உலகை மறு உருவாக்கம் செய்வதன் மூலமாக மட்டுமே அப்பிரச்சினையைத் தீர்க்க முடியும்.” (“… philosophical problems arise out of real-life conditions, and they can be solved only by changing those conditions-by remaking the world.”). அதாவது, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையானது எதார்த்தபூர்வ வாழ்க்கை நிலையில், அதாவது அது நிஜமாக எவ்வாறு காணப் படுகிறதோ அதை அதன் வடிவில் தீர்க்காமல் வேறு வழியில், அதாவது பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்தால் அல்லது வர்க்கப் பிரச்சினை தீர்ந்தால் இனப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று ஞானப்பால் குடிக்க முடியாது.
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையா னது தனிப்பட்ட மனித மனதில் இருந்தோ அல்லது வெறும் கொலைவெறி மனப்பாங்கில் இருந்தோ உருவாகுவதில்லை. அது காணப்படும் புவியியல் – வரலாற்றுப் பின்னணியில் இருந்து உருவாகிறது.
கி.மு ஆயிரமாம் ஆண்டுக்கு முன்பிருந்தே எகிப்தியர், பாரசிகர், பரந்த அரேபியர், ரோமானியர், பரந்த ஐரோப்பியர் என ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பியக் கண்டங்களைச் சேர்ந்த பல இனங்களாலும் யூதர்கள் அழிவுக்கும் துன்பத்திற்கும் உள்ளாகினர். இதற்கு இவர்களது புவிசார் அமைவிட அரசியற் பின்னணி பிரதான காரணமாகும். இத்தகைய புவிசார் அமைவிட வரலாற்றுப் பின்னணியில் (Geohistorical background) இருந்து இறைவனால் “வாக்களிக்கப்பட்ட பூமி – The Promised Land” என்ற மத ரீதியான ஐதீகம் (Myth) கி.மு 1000 ஆம் ஆண்டளவில் வடிவம் பெறத் தொடங்கியது. எந்தொரு ஐதீகத்துக்குப் பின்னாலும் அதற்கு அடிப்படையான ஒரு நிஜமான வாழ்வியற் பின்னணி அல்லது வரலாற்றுப் பின்னணி இருக்கவே செய்யும்.
யூதர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையானது மேற்படி மூன்று கண்டங்களையும் சேர்ந்த பல்வேறு இனங்களினாலும் காலத்துக்குக் காலம் அவரவர் பங்களிப்புக்கு உட்பட்டுச் சுமாராக மூவாயிரம் ஆண்டுகால வரலாற்றுப் போக்கில் திரட்சி பெற்ற ஒன்றாகவும் காணப்படுகிறது.
இனப்படுகொலை என்றாலே அது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைதான். அதனை அவ்வப்போது எழுமாத்திரமாக நிகழும் ஒன்றாய் வெறும் உதிரி அர்த்தத்தில் பொருள் கொள்ளக்கூடாது. இலட்சக்கணக்கான ஆண்டுகளு க்கு முன்னான ஆதி மனித இனக்குழுக்களின் மத்தியில் ஓரினத்தை இன்னொரு இனம் அழித்துள்ள வரலாறுண்டு. உயிரை உயிர் உண்டு வாழ்வதே உயிர் வாழ்வு என்ற நியதிக்கு அமைய இனங்களும் அப்போதைய தத்தம் தேவைகளுக்கேற்ப ஓரினத்தை இன்னொரு இனம் கொன்று உயிர் வாழும் வரலாற்றுப் போக்கு இலட்சம் ஆண்டுகால மனிதகுல வரலாற்றில் உண்டு.
இனக் கலவரம் (Ethnic Riots), ஓரினத்தின் மீதான திட்டமிடப்பட்ட பாரிய படுகொலை (Pogrom), இன, மத, அரச அடிப்படையில் ஒரு மக்கள் கூட்டத்துக்கு எதிராகப் பரந்த அளவிலான படுகொலைகள் உட்பட தீ வைத்தல் முதற்கொண்டு நாசகார வேலைகளைச் செய்தல் (Holocaust) என இனப்படுகொலை பற்றிப் பல உதிரியான பதங்கள் பயன்படுத்தப்பட்டாலும் இவை அனைத்துமே கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்குள் அடங்குவனவாகும்.
முதன் முறையாக 1944 ஆம் ஆண்டு போலந்து யூத இனத்தவரான ரபாயேல் லிம்கின் (Raphael Lemkin) என்பவர் “Genocide” என்ற பதத்தை வடிவமைத்தார். 1946 ஆம் ஆண்டு போலந்தில் நடந்த யூத இனப்படுகொலை விசாரணையின் போது “Genocide” வார்த்தை ஒரு சட்டப் பதமாகப் பயன்பாடடைந்தது. இதன் பின்பு 1948 ஆம் ஆண்டு ஐ.நா “Genocide Convention” உடன் சர்வதேச அளவில் “Genocide” என்ற பதம் இணைத்துக்கொள்ளப்பட்டது.
“Capitalism: A Structural Genocide” என்ற தலைப்பில் Garry Leech என்பவரால் எழுதி 2012 ஆம் ஆண்டு வெளியான நூலில், தற்போதைய உலகில் அரசுகள் மூலமாக நடத்தப்படும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகளுக்கு உலகளாவிய முதலாளித்துவம் அடிப்படைக் காரணம் என்று ஒரு தத்துவப் பின்னணியைக் கூற முற்படுகிறார்.
நவீன தொழில்சார் பண்ட உற்பத்தி, முதலாளித்துவம் போன்றவை தோன்றும் முன்பேயும் இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலேயேயும் இனப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. முதலாளித் துவத்தின் (Capitalism) மூலம் தனியார் முதலீடு (Private investment), தனியார் முதலீட்டின் மூலம் தனியுடைமை (Private ownership), தனி உடை மையின் மூலம் சொத்துடைமை ( Property ownership) என்று இதன் தத்துவப் பின்னணி பின்னோக்கிய மூலத்திற்குச் செல்லும்.
இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஓர் இனக்குழு தனது உயிர் வாழ்வுக்காக வளமான நிலத்தையும், நீர் நிலைகளையும், வளமான காட்டையும் கட்டுப்படுத்துவதற்காக இன்னொரு இனக்குழுவுடன் மோதி அதில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்வதில் இருந்து சொத்துடைமையின் மூலக்கூறை அடையாளம் காணலாம். இன்று காட்டுப் பிராணிகளின் வாழ்வியலில் பிராணிகளிடையேயான இருப் பிடத்திற்கு உரிமை கோருவதான மோதல்களில், இதற்கான தெளிவான மூலத்தைக் காணலாம். அதனை வனவியல் விஞ்ஞானத்தில் வாய்ப்பான பகுதி (Comfort zone) என்றழைப்பர்.
தனியார் முதலீட்டை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கட்டமைப்புத்தான் கட்டமைக் கப்பட்ட இனப்படுகொலைக்கான மூல காரணம் என்பது அறிவியல் சார்ந்த, தற்கால அரசியல் பொருளாதாரம் பற்றிய ஒரு கோட்பாட்டு விளக்கம். ஆனால், இதன்படி உலகளாவிய அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு மாறும் போது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையும் இல்லாது போய்விடும் என்கின்ற ஒரு முடிவுக்கு வர நேர்கிறது. உண்மை அப்படி அல்ல. “ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது”. முத லாளித்துவக் கட்டமைப்பை மாற்றுவதற்கு இடையில் அந்தக் கட்டமைப்பின் விளைவான கட்ட மைக்கப்பட்ட இனப்படுகொலை நடந்தேறி இன அழிப்புகள் ஆங்காங்கே பூர்த்தியாகிவிடும்.
ஏகாதிபத்தியத்தை விடவும் ஆபத்தானது இன அழிப்பு என்கின்ற வகையில் முதலில் இன அழிப்பைத் தடுப்பதற்கான பாதுகாப்பு முதன் மையானது. ஒரு பிரச்சினை எதார்த்தத்தில் எந்த வடிவில் காணப்படுகிறதோ அந்த வடிவில் அது முதலில் தீர்க்கப்பட்டாக வேண்டும். இது சார்ந்த குழப்பம் அதிகம் மார்க்சிச அல்லது கம்யூனிசவாதிகளிடம் ஏற்படுகிறது. ஆனால், இதற்கான சரியான நடைமுறையைப் பொதுவு டைமை அரசை நிறுவியவரான லெனினின் கோட்பாட்டிலும் நடைமுறையிலும் காணலாம். பொதுவுடைமைப் புரட்சிக்கு அடிப்படை யான அம்சங்களில் ஒன்றாகத் தேசிய இனங்க ளின் பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணய உரிமையை வரையறுத்து அதனை லெனின் முதன்மைப் படுத்தினார் என்ற நடைமுறை உண்மையை மேற்படி இடதுசாரிகள் பலரும் கண்டுகொள்ளத் தவறுகின்றனர்.
‘தத்துவப் பிரச்சினை எதார்த்ததில் நிஜ மான வாழ்நிலையிலிருந்து எழுகிறது’ என் கின்ற அறிஞர் மார்க்ஸின் கோட்பாட்டையும் மார்க்சிசவாதிகள் கவனிக்கத் தவறுகின்றனர். மனித வாழ்வுக்கு “உணவு, உடை, உறைவிடம்” என்பன அடிப்படையானவையே ஆனாலும், பிராணிகள் ஆயினும் சரி, மனிதர்களாயினும் சரி உயிர் வாழ்வுக்கு முதன்மையானது பாதுகாப்பு. எனவே பாதுகாப்பு இன்றி வேறு எதுவும் இருந்து பயனில்லை. ஆதலால், அடிப்படையிலும் அடிப்படையானது பாதுகாப்பு. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் முதலில் முன்னுரிமை கொடுப்பது தேசிய பாதுகாப்புக்காகும். இதனை மேலும் அழுத்தமாக தேசிய பாதுகாப்பும் பந்தோபஸ்தும் (National defence and security) என்ற பதமும் நடைமுறையும் விளக்கி நிற்கின்றது.
பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்தால் இனப் பிரச்சினை தீர்ந்துவிடும், இனப்படுகொலை தீர்ந்துவிடும் என்ற வெறும் பொருளாதார வாதமானது இனப்படுகொலையை இன்னொரு வழியில் முன்னெடுப்பதற்கான மார்க்கமே ஆகும். இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை; பொருளாதாரப் பிரச்சினைதான் உண்டு பொருளா தாரப் பிரச்சினை தீர்ந்தால் இனப் பிரச்சினை தானாகவே தீர்ந்துவிடும் என்று மஹிந்த ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவும் கூறிய ஆபத்தான பொருளாதார இனப்படுகொலை வாதத்தை உரிய வகையில் கண்டுகொள்ளத் தவற முடியாது.
2024 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அதன் முக்கிய வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திசநாயக்க போன்றோரும் இத்தகைய கட்டமைக்கப்பட்ட பொருளாதார இனப்படு கொலை வாதத்தையே முன்நிறுத்தினர். இவர்கள் கூறும் பொருளாதார இனப்படுகொலை வாதத்துக் குள் தமிழ்த் தேசிய இனம் தன் தனித்துவத்தை இழந்து சிங்கள பௌத்த மயமாக்கத்திற்குள் கரைந்து அழிந்து போய்விடும்.
மனிதன் வெறுமனே ஒரு பொருளாதாரப் பிராணி அல்ல. பொருளாதாரத்துடன் கூடவே மொழி, பண்பாடு, கலை, தனித்துவம், வாழ்க்கை முறை ஆகிய அனைத்து அம்சங்களினாலும் கூட்டாய் பின்னிப் பிணைக்கப்பட்ட ஒரு தெளிவான சமூக வாழ்வைக் கொண்டவன். மனிதன் வெறுமனே ஓர் உணவுண்ணிப் பிராணி யல்ல. சராசரி மனிதர்களின் கண்களில் வெறும் உணவுண்ணிகளாகத் தோன்றும் பிராணி
களிடத்திற் கூட தெளிவான பண்பாட்டு வேறு பாடுகளும், வாழ்க்கை முறை வேறுபாடுகளும், தனித்துவங்களும் உண்டு என்பதைக் கண்டு கொள்வதற்கான மனத்தை மனிதன் விரிவாக்க வேண்டும். இன்று வளர்ந்து வரும் அறிவியல் துறையான பிராணிகள் நடத்தையியல் விஞ்ஞானம் (Animal behavioral science) பிராணிகளின் பண்பாட்டியல் பழக்கங்களைக் கூர்ந்து அவதானிக் கின்றது.
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை விவகாரத்தில் பொருளாதாரம் ஒரு அம்சமாக இருக்கின்றதே ஆயினும், அதனைக் குறித்த புவியியல், அரசியல், வரலாற்று வளர்ச்சிப் போக்கு என்பவற்றுக்கு ஊடாக நடைமுறை சார்ந்து இரத்தமும் தசையுமான வாழ்வியலுக்கூடாக அதைப் பார்வையிட வேண்டும்.
நல்லதோ, கெட்டதோ எந்தொரு செயலும் அல்லது நகர்வும் அவை தொடங்கிய இடத்தில் இருந்து அவை அவற்றுக்குரிய தர்க்கபூர்வப் பாதையில் பயணிக்கும். சமைப்பதற்கு விறகைக் கொளுத்தினால் அதில் வெப்பம் நேரடி விளைவாக (Direct effect) வரும்போது புகை பக்கவிளைவாக (Side effect) வருகிறது. இதில் பக்கவிளைவான புகையை எதிர்கொள்ளத் தவற முடியாது. புகையைப் புகையாக அணுகியாக வேண்டும். சமூகம், அரசியல், வாழ்வியல் அனைத்திற்கும் இது பொருந்தும். எனவே இனப் பிரச்சினையை அல்லது இனப்படுகொலையை பொருளாதாரப் பிரச்சினையின் வெளிப்பாடு என்று கூறிவிட்டு அதனை அதற்குரிய பரிமாணத்தில் அணுகத் தவற முடியாது.
எப்போதும் அடிப்படையையும் அதனோடு இணைந்த வெளிப்பாட்டையும் இணைத் துப் பார்க்க வேண்டும். இதில் வெளிப் பாட்டைப் புறந்தள்ள முடியாது. அதாவது, நெருப்பில் இருந்து தோன்றும் புகை எப்படி பொய் இல்லையோ அப்படியே வெளிப்பாடுகளுக்கும் அவையவற்றுக்குரிய உண்மைகள் அல்லது தாக்கங்கள் உண்டு. தத்துவம் நடைமுறைக்கு வழிகாட்ட வேண்டுமே தவிர அது நடைமுறையில் இருந்து பிரிந்து கற்பனையில் இருக்க முடியாது.
ஆதலாற்தான் “எந்த ஒரு நடத்தையின் வெளிப்பாடும் அதற்குள் உள்ளடங்கி இருக்கும் தத்துவத்தை எமக்கு ஓரளவு சொல்லி நிற்கும் (“For the outcome, the outcome tells us something about the ideas.”) என்ற தத்துவார்த்தக் கூற்றும் இவ்விடத்தில் கவனத்திற்குரியது.
அனைத்தையும் தழுவிய முழுமைப் படுத்தப்பட்ட அணுகுமுறை (Holistic approach) என்ற அறிவியல் பார்வையில் நின்று கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை வேரில் இருந்து மரமென விரிந்து விழுதுவரை அதன் சூழலையும் உள்ளடக்கி உரு வரை தீட்ட வேண்டும். அதனை அதனதன் குறித்த சூழலில் வைத்து உரிய வகையில் அதற்கே உரிய தனித்துவமான வடிவில் எடை போட வேண்டும்.
ஆதலால், கட்டமைக்கப்பட்ட இனப்படு கொலைகளை வெறும் பொத்தாம் போக்காகப் பார்க்காது அவை அவற்றுக்குரிய தனித்துவமான பின்னணிகளில் வைத்து புவியியல் – அரசியல் – பொருளாதார – சமூகவியல் வரலாற்று வளர்ச்சிப் போக்கு என்பனவற்றிற்கு ஊடாக அவை அவற்றுக் குரிய வகையில் எடை போடப்பட வேண்டியது முக்கியம்.
எந்த ஒரு தத்துவமும் நடைமுறையால் மெய்ப்பிக்கப்படாது விட்டால் அது வறண்ட வாதமே; எந்த ஒரு இலட்சியமும் நடைமுறைக்குப் பொருந்தாவிட்டால் அது கற்பனாவாதமே. கற்பனாவாதமும் வறண்டவாதமும் எதிரியின் கையில் கொடுக்கப்படும் கூரிய வாள்களாகும்.
பாகம் 1 முற்றும்