இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதியிடல் திட்டத்தை உலக வங்கி அறிவிப்பு

இலங்கையில் தொழில் உருவாக்கம் மற்றும் தனியார்துறை வளர்ச்சிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 3 ஆண்டு நிதியிடல் திட்டத்தை உலக வங்கி அறிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடனான கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு உலக வங்கி குழுமம் எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலாக் கைத்தொழில், விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட குறுகிய காலத்தில் பயனடையக் கூடிய துறைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, நாட்டின் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைத்திட்டம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.