இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்.போதனா வைத்தியசாலை காணியை விடுவிக்குமாறு வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் கோருகிறார்

யாழ்ப்பாணம் கொட்டடி – மீனாட்சிபுரத்தில் உள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சி.யமுனானந்தா தெரிவித்தார்.
குறித்த காணி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், கொட்டடி – மீனாட்சிபுரம் பகுதியில் வைத்தியசாலைக்கு சொந்தமான 1.4 ஏக்கர் பரப்பளவுள்ள காணி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

2010ஆம் ஆண்டு தொடக்கம் இந்த காணியை விடுவித்து தரும்படி கோரிக்கை விடுத்துவருகிற போதும் இன்று வரை காணி விடுவிக்கப்படவில்லை.  இக்காணி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மேலதிக அபிவிருத்தி தேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியாகும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த காணியில் பல வருடங்களாக இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் காணியை யாழ். போதனா வைத்தியசாலையின் தேவைக்காக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
இக்காணியை உடனடியாக விடுவித்து தருவதற்கு வட மாகாண ஆளுநரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ். போதனா வைத்தியசாலைின் பதில் பணிப்பாளர் சி.யமுனானந்தா வலியுறுத்தியுள்ளார்.