இந்தோனீசியாவில் காணாமல் போன விமானம் விழுந்து விபத்து ஏற்பட்ட இடம் கண்டுபிடிப்பு

இந்தோனீசியாவில் காணாமல் போன பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடத்தை கண்டறிந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் விபத்துக்குள்ளானதாக கருதப்படும் இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் அல்ல என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவிஜயா ஏர் விமான சேவையின் இந்த விமானம் அந் நாட்டின் மேற்கு கேலிமாந்தன் மாகாணத்தில் உள்ள போன்டியானக் என்ற இடத்தை நோக்கி 62 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது சனிக்கிழமையன்று திடீரென  காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், விமானம் விழுந்ததாகக் கருதப்படும் சம்பவ இடத்திற்கு கடற்படையை சேர்ந்த முக்குளிப்பு வீரர்களுடன் 10க்கும் மேற்பட்ட கப்பல்களும் அனுப்பப்பட்டுள்ளன என அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.