Tamil News
Home செய்திகள் இந்து மதத்தின் தொன்மையை மாற்றியமைப்தே தொல்லியல் திணைக்களத்தின் இலக்கு-சபா குகதாஸ்

இந்து மதத்தின் தொன்மையை மாற்றியமைப்தே தொல்லியல் திணைக்களத்தின் இலக்கு-சபா குகதாஸ்

இலங்கையில் ஆதி தொன்மைகள் கொண்ட மதமாக விளங்குவது இந்து மதம் என்பதை வரலாற்று ரீதியாக யாரும் இல்லை என்று கூறமுடியாது  எனத் தெரிவித்துள்ள ரெலோ இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ், காரணம் தொன்மையான நூல்கள், கல்வெட்டு ஆதாரங்கள் அதனை நிறுவுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

தொல்லியல் ஆய்வு என்ற பெயரில், தமிழர் தாயகப் பிரதேசத்தில் சைவ ஆலயங்கள் மற்றும் தமிழர்களின் வரலாற்றோடு தொடர்புடைய இடங்களில் தொல்லியல்  துறையினர்  பௌத்த துரவிகள், இராணுவத்தினரின் துணையுடன் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு தமிழ் அரசியல் தலைவர்கள், பொது மக்கள் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்துள்ள சபா குகதாஸ்,
“இலங்கையில் உள்ள ஏனைய மதங்கள் கொண்டுவரப்பட்டமைக்கான முழுமையான வரலாறுகள் காலங்களையும் ஆட்சியாளர்களின் ஆதரிப்பையும் துல்லியமாக எடுத்துக் கூறுகின்றன. அந்த வகையில் இலங்கையை திருமந்திரத்தை அருளிய திருமூலர் சிவபூமி என்றே குறிப்பிட்டுள்ளார் அத்துடன் இராவணன் என்ற சிவ பக்தனின் வரலாறு மேலும் பல ஆதாரங்களை உறுதி செய்துள்ளது.

இலங்கையில் உள்ள பஞ்ச ஈச்சரங்கள் சிவலிங்க வழிபாட்டின் தொன்மைகளை கூறுவதுடன் அவற்றுள் இரண்டு ஈச்சரங்கள் இயற்கையாக தோன்றிய சிவலிங்கங்களை கொண்ட தான்தோன்றீஸ்வரங்களாக காணப்படுகின்றன.
இலங்கைத் தீவின் அனைத்துப் பாகங்களிலும் இந்து மதத்தின் தொன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் தென்னிலங்கையில் அவற்றின் தொன்மைகள் மாற்றியமைக்கப்பட்டு பௌத்தத்தின் சிறப்புக்களே முதன்மை பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சி நிரலே வடக்கு, கிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழர் பிரதேசங்களிலும் தொல்லியல் திணைக்களத்தின் மூலமாக இந்து மதத்தின் தொன்மைகளை மாற்றி அமைத்து பௌத்த மத விடையங்களை முதன்மைப் படுத்தி இலங்கைத் தீவு முழுவதும் சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நிறுவ திட்டமிட்ட அதிகார சக்தியின் துணையுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

தென்னிலங்கையில் கதிர்காமம் முருகன் ஆலயம் இன்று பௌத்த விகாரைகளால் சூழப்பட்டிருப்பது , சிவனுடைய பாதம் பதிந்த சிவனெளிபாதமலையின் பெயர் மாற்றப்பட்டமை ,சிவகிரி என அழைக்கப்பட்ட குன்று சிகிரியா பெயர் மாற்றப்பட்டமை அனுராதபுர ,பொலநறுவைக்கால சிவ ஆலயங்கள் சிதைக்கப்பட்டமை அவற்றின் தொன்மையான வரலாறுகள் அழிக்கப்பட்டமை திருக்கோணேஸ்வரர் ஆலய முன் பகுதியில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டமை கன்னியாவில் விகாரை அமைத்தமை போன்ற பல உதாரணங்கள் உள்ளன இவ்வாறான திட்டமிட்ட ஒரு இனத்தின் கலாசார அழிப்பு அரச நிகழ்ச்சி நிரலாக தமிழர் தாயகத்தை குறிவைத்து அரங்கேற்றப்படுகிறது.இதற்கு இலங்கை அரசாங்கம் வைத்த பெயர்தான் தொல்லியலை பாதுகாத்தல்” என்றார்.

Exit mobile version