இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் மறைத்துக்கொண்டிருப்பதால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் சந்தேகங்களை தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடு என்ற வகையில் உலகில் எங்களுக்கு தனித்து பயணிக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி நாங்கள் நம்புவதில்லை. அதனால் ஏனைய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதனால் அரசாங்கம் வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதை நாங்கள் எதிராக பார்ப்பதில்லை. அனைத்து நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கிறோம்.
என்றாலும் தற்போது பிரச்சினையாக இருப்பது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது, அரசாங்கம் அரசாங்கத்துடன் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சைத்திட்டிருக்கிறது. ஆனால் அந்த ஒப்பந்தங்கள் எதனையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. குறைந்தபட்சம் பாராளுமன்றத்துக்குகூட சமர்ப்பிக்கவில்லை. அதனால் ஒப்பந்தங்களில் இருக்கும் விடயங்கள் யாருக்கும் தெரியாது.அரசாங்கம் ஏன் இதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் இருக்கிறது என எங்களுக்கு தெரியாது.
அரசாங்கம் இந்த ஒப்பந்தங்களை நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய கைச்சாத்திட்டிருந்தால், இந்த ஒப்பந்தத்துக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப்பெற்றிருந்தால் இதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கும் முடியும். என்றாலும் இந்த ஒப்பந்தங்களை சபைக்கு சமர்ப்பிப்பதை பிற்படுத்தி வருவதாலே சமூகத்துக்குள்ளும் எங்களுக்குள்ளும் இதுதொடர்பில் சந்தேகங்கள் எழுவது நியாயமானதாகும்.
அத்துடன் அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களில் பாதுகாப்பு ஒப்பந்தமும் ஒன்றாகும். இலங்கையுடன் செய்துகொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் பாரிய வெற்றியாகவே இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.அவ்வாறு எதுவும் இல்லை என்றால் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அனைவருக்கும் பார்த்துக்கொள்ள முடியுமான வகையில் அரசாங்கத்துக்கு சபைக்கு சமர்ப்பிக்க முடியும்.அவ்வாறு இல்லாமல் தொடர்ந்தும் இதனை மறைக்க முற்படும்போதுதான் பிரச்சினை எழுகிறது.
அதேபோன்று அரசாங்கம் சுகாதாரம் தொடர்பாகவும் இரண்டு ஒப்பந்தங்களை இந்தியாவுடன் செய்துகொண்டுள்ளது.அது தொடர்பாகவும் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன.அதனால் அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தொடர்ந்தும் மறைத்துக்கொண்டு, இந்த ஒப்பந்தங்களில் நாட்டுக்கு நன்மை இருப்பதாக தெரிவித்துக்கொண்டு முன்னுக்கு செல்ல முற்பட்டாலும், நிச்சியமாக மக்கள் மத்தியில் இந்த ஒப்பந்தங்கள் தொடர்பில் எழும் சந்தேகங்களை தடுக்க முடியாது என்றார்.