இந்தியாவுடன் இரகசியமாக செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிலாபத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கருத்துரைத்த அவர், நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை மூடி மறைப்பதற்கு இடமளிக்க போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
‘159 பெரும்பான்மை பலம் உள்ளது என்பதால் இந்த அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதில்லை’. ‘தன்னிச்சையாக செயற்படுகிறது. பெரும்பான்மை பலம் எம்மிடமும் இருந்தது. ஆகவே அதிகாரம் என்பது நிலையற்றது என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்’ என்று நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது.
அந்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த முதல் வருடத்திலேயே நிறைவேற்றுவதாக குறிப்பிடப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அந்த வாக்குறுதிகள் குறிப்பிடப்படவில்லை.
தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட வாக்குறுதிகள் கூட வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அரச நிர்வாகத்தில் நாட்டு மக்கள் மத்தியில் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் இன்றுவரையில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
ஒப்பந்தங்களில் உள்ள விடயங்களை அறிந்துக்கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.