இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று

கடந்த நான்கு நாட்களாக இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து 3 இலட்சத்தை  கடந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 27ம் திகதி மட்டும் 15,830 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து வரும் வெள்ளிக்கிழமை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே மருத்துவமனையில்  சிகிச்சை தேவைப்படுகிறது என்று உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மோசமாக இருப்பது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜாசரெவிக் கூறும் போது, “இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது. இதிலும் குறைவானவர்களுக்குத்தான் ஓக்சிஜன் அவசியமாகிறது.

ஆனால் தற்போது பிரச்சினையின் ஒரு பகுதி என்னவென்று பார்த்தால், சரியான தகவல்கள், ஆலோசனைகள் கிடைக்காததின் விளைவாக பலர் மருத்துவமனைகளுக்கு விரைகிறார்கள். (அவர்களுக்கு வீட்டில் இருந்து கொண்டு பராமரித்து, கண்காணித்து வந்தாலே கொரோனாவை பாதுகாப்பாக நிர்வகிக்க முடியும்.)

சமூக அளவிலான மையங்கள் நோயாளிகளை சோதனை செய்ய வேண்டும். பாதுகாப்பான வீட்டு பராமரிப்பு குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்” என்றார்.